“எங்கள் குழந்தைகள் பட்டினியால் அழுகிறார்கள்” – தலிபான் ஆட்சியில் 100 நாள்கள்!

“எங்கள் குழந்தைகள் பட்டினியால் அழுகிறார்கள்” – தலிபான் ஆட்சியில் 100 நாள்கள்!
“எங்கள் குழந்தைகள் பட்டினியால் அழுகிறார்கள்” – தலிபான் ஆட்சியில் 100 நாள்கள்!

(கோப்பு புகைப்படம்)

தலிபான் ஆட்சியின் கீழ் 100 நாட்களை கடந்த ஆப்கானிஸ்தானில் உணவுப் பற்றாக்குறை மற்றும் சுகாதார சீர்கேட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமை இன்னும் மோசமாகும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்

தங்களின் பட்டினி போராட்டம் குறித்து விவரிக்கும் இரண்டு குழந்தைகளின் தாயான ஷர்குனா, “நானும் என் கணவரும் பட்டினி கிடக்கலாம், ஆனால் எங்கள் குழந்தைகளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, அவர்கள் பசியால் அழுகிறார்கள், இதனை சமாளிப்பது மிகவும் கடினம். நாங்கள் மாலையில் ஒருவேளை உணவுதான் சாப்பிடுகிறோம். சில சமயங்களில் அதுவும் இல்லை, நாங்கள் எதுவும் சாப்பிடாமல் தூங்குவோம்" என்று கூறினார். மேலும், “ எங்கள் குடும்பம் இப்போது பச்சை மாவினையே உணவாக சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். சில நாட்களுக்கு முன், ஒரு மூட்டை மாவு கிடைத்தது, அதுவும் விலை உயர்ந்தது. விலை அதிகமாக இருப்பதால், இனி மாவு மற்றும் எண்ணெய் வாங்க முடியாது. உணவு விலை அதிகரித்ததால், ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவை மட்டுமே வாங்க முடிகிறது" என்று கூறினார்.

(கோப்பு புகைப்படம்)

இதுகுறித்து பேசிய ஷர்குனாவின் எட்டு வயது மகன், "எங்களுக்கு ரொட்டி மற்றும் சில நேரங்களில் சாதம் மட்டுமே கிடைக்கும், ஆனால் இறைச்சி மற்றும் பழங்கள் கிடைப்பது இல்லை. முன்பை விட எங்களுக்கு உணவு மிகவும் குறைவாகவே கிடைக்கிறது. சில சமயங்களில் உணவே கிடைப்பதில்லை, அப்போதெல்லாம் எதுவும் சாப்பிடாமலேயே தூங்குகிறோம்" என கூறினார்.

(கோப்பு புகைப்படம்)

முன்னதாக, வீழ்ச்சியின் விளிம்பில் இருந்து ஆப்கானிஸ்தானை மீட்டெடுக்க அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால் குழந்தைகள் உட்பட மில்லியன் கணக்கான ஆப்கானியர்கள் பட்டினியால் இறக்க நேரிடும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்திருந்தது. உலக உணவுத் திட்டத்தின் (WFP) நிர்வாக இயக்குனர் டேவிட் பீஸ்லி கூறுகையில், ஆப்கானிஸ்தானின் 39 மில்லியன் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையை உடைய 22.8 மில்லியன் மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்திருந்தார்.

(கோப்பு புகைப்படம்)

இருபது ஆண்டுகள் நீடித்த போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்கா தனது படைகளை வெளியேற்றிய பிறகு ஆகஸ்டு 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது, அதன் பின்னர் அந்த நாடு கடுமையான பொருளாதாரம் மற்றும் உணவுப்பஞ்ச நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.  தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு பல்வேறு உலக நாடுகளும் அந்த நாட்டிற்கு வழங்கு பொருளாதார உதவிகள் மற்றும் பல்வேறு உதவிகளையும் நிறுத்திவிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com