கூட்டணியில் இருந்துகொண்டே ஜெயலலிதாவை எதிர்த்த விஜயகாந்த்!

கூட்டணியில் இருந்துகொண்டே ஜெயலலிதாவை எதிர்த்த விஜயகாந்த்!
கூட்டணியில் இருந்துகொண்டே ஜெயலலிதாவை எதிர்த்த விஜயகாந்த்!

ராணுவப்படை, விமானப்படை, கப்பல்படை ஆகிய முப்படைகளில் உயரிய பொறுப்பிலுள்ளவர்களைத்தான் கேப்டன் என்று மரியாதையோடு எல்லா நாடுகளிலும் அழைப்பார்கள். ஆனால், சினிமா நடிகர் ஒருவருக்கு மக்களே ‘கேப்டன்’ என்று அன்போடு அழைத்தார்கள் என்றால், அது நடிகரும் அரசியல்வாதியுமான தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைத்தான். இன்று அவரின் 68 வது பிறந்தநாள் ரசிகர்களாலும் தொண்டர்களாலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில், கடந்த 2011, 2016 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் தமிழகத்தின் பெரிய கட்சிகளான திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிக்காக தமிழக அரசியலில் ஒருவரை மையப்படுத்திக்கொண்டு காத்திருந்தது என்றால், அது விஜயகாந்த்திற்காகத்தான். ஏனென்றால், தமிழக அரசியலில் வெற்றித்தோல்வியை தீர்மானிக்கும் டிசைடிங் ஃபேக்டராக இருந்தவர். 

விஜயராஜ் என்னும் விஜயகாந்த்!

விஜயராஜ் என்னும் விஜயகாந்த் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி அழகர் சாமி- ஆண்டாள் தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர். சிறுவயதிலேயே தொழில் நிமித்தமாக மதுரையில் வந்துக்குடியேறியது அவரது குடும்பம். அதனால், மதுரையில் பத்தாம் வகுப்புவரை படித்து முடித்துவிட்டு அப்பாவுக்கு உதவியாக அரிசி ஆலை நிர்வாகத்தை கவனித்து வந்தவருக்கு சினிமா மீதே ஆர்வம். அதனால்,   1978 ஆம் ஆண்டு ’இனிக்கும் இளமை’ என்ற படத்தில் முதன்முதலாக கெளரவத் தோற்றத்தில் நடித்தார்.

எல்லோரின் பாராட்டுக் கிடைக்கவே இனி அரிசி ஆலை வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டு முழு மூச்சாக சென்னை வந்து சினிமாவில் இறங்கினார். ஓம் சக்தி, தூரத்து இடிமுழக்கம் போன்ற படங்களில் நடித்தவரை தமிழகம் முழுக்க திரும்பிப் பார்க்க வைத்தது எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான ‘சட்டம் ஒரு இருட்டறை’. அப்படமே, விஜயகாந்த்தை தமிழ் சினிமாவில் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.  வைதேகி காத்திருந்தால், நானே ராஜா நானே மந்திரி, அம்மன் கோயில் கிழக்காலே, ஊமை விழிகள், நூறாவதுநாள், தென்பாண்டி சீமையிலே, பூந்தோட்டக் காவல்காரன், சத்ரியன்,புலன் விசாரணை, மாநகரக்காவல், சின்னக்கவுடண்டர் என்று 150 க்கும்  மேற்பட்ட படங்களில் நடித்தவருக்கு 1991-ஆம் ஆண்டு தனது நூறாவது படமாக விஜயகாந்த் நடித்த ’கேப்டன் பிரபாகரன்’ படம் மாபெரும் வெற்றியடைந்து  அரசியலிலும் ’கேப்டன்’ என்று அழைக்கும் அளவுக்கு கேப்டன் பட்டத்தைக் கொடுத்தது.  இதனால், அவருக்கு ரசிகர் மன்றங்கள் மேலும் அதிகரிக்கத் தொடங்கின. 1993-ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தல்களில் விஜயகாந்தின் ரசிகர் மன்றத்தினர் போட்டியிட்டு பல இடங்களில் வெற்றிகளை குவித்தனர். இதுவும், விஜயகாந்துக்கு அரசியலில் கலக்குவதற்கான ட்ரெயிலராக இருந்தது. 

அரசியல் வாழ்க்கை!

2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி  ‘தேசிய முற்போக்கு திராவிடக் கழகம்’ என்றக் கட்சியை தொடங்கினார். ’மக்களோடும் கடவுளோடும்தான் கூட்டணி’ என்று தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலும் 2006 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டபோது திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளுக்கு உண்மையான மாற்று தேமுதிகதான் என்று மக்கள் நம்பத்தொடங்கியது விஜயகாந்தின் பலமாக இருந்தது. அந்தத்தேர்தலில் 10 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஓட்டுகள் வாங்கி முன்றாவது பெரியக்கட்சியாக மாறியது மற்ற அரசியல் கட்சிகளுக்கு மிகப்பெரிய ஆச்சர்யத்தை கொடுத்தது. அதுவும், எம்ஜிஆர் பிரச்சாரம் செய்த வேனிலேயே பிரச்சாரம் செய்து அடுத்தடுத்து நடந்த இடைத்தேர்தலிலும் தனித்துப்போட்டியிட்டு தனது பலத்தை வலுப்படுத்தத் துவங்கினார் விஜயகாந்த். நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது ஆரத்தி எடுத்து வரவேற்பார்கள் தமிழக மக்கள். அதுவும், சூப்பர் ஸ்டார் லெவலில் இருந்த விஜயகாந்த் என்றால்? ‘கருப்பு எம்ஜிஆர்’ என்றே ஆரவாரத்துடன் கொண்டாடத் துவங்கிவிட்டார்கள். 

விருதாச்சலத்தில் முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆனபோது, தனது சொந்த பணத்திலேயே பல்வேறு தொழிற்பயிற்சிகள், வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி மக்கள் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றார். சிங்கிளாக வரும் சிங்கமாக சட்டமன்றத்துக்குள் நுழைந்தபோதுதான் அரசியல் இன்னும் பாடம் கற்றுக்கொடுத்தது. அதன் விளைவாகத்தான் 2011 ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்து கணிசமான இடங்களையும் பிடித்தார். எந்தக்கூட்டணியில் வெற்றிபெற்றாரோ அதேக்கூட்டணியின்  விலைவாசி உயர்வு, ஊழல் என மக்கள் விரோதப்போக்குகளையும் எதிர்க்க ஆரம்பித்தபோது மக்கள் மத்தியில் விஜயகாந்துக்கு இன்னும் செல்வாக்கு கூடியது. சினிமாவில் அநியாயத்தை தட்டிக்கேட்பதுபோல நிஜ வாழ்க்கையிலும் அதிரடியாக தட்டிக்கேட்க ஆரம்பித்ததுதான் மிகப்பெரிய பலம்.

அப்துல்கலாம் மறைந்தபோது ஜெயலலிதா செல்லாமல் விமர்சனம் ஆனபோது, விஜயகாந்த் சென்று கண்ணீர் விட்டு அழுதது,  ‘கேப்டனோட மனசு குழந்தைமாதிரிடா’ என நெகிழ்ச்சிகளையும் பாராட்டுகளையும் குவித்தது. மேலும்,  விஜயகாந்தின் பக்காபலம் என்றால் அண்ணி என்று அவரது தொண்டர்களால் அன்போடு அழைக்கப்படும் அவரது மனைவி பிரேமலதா. தேர்தல் பிரச்சாரங்களுக்கு விஜயகாந்த் செல்லமுடியவில்லை என்றாலும் சூறாவளியாய் சுழன்று அரசியல் கட்சிகளையும் மக்கள் கவனத்தையும் ஈர்ப்பவர் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

நடிகர் சங்கத்திலும் சாதனைகள்!

அவர், அரசியலில் இப்படியென்றால் நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது விஜயகாந்த் செய்த சாதனைகள் ஏராளம். புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர் சங்கம் குறித்து சினிமாத்துறையினர் பேசும்போதெல்லாம் விஜயகாந்த் தலைவராக இருந்தகாலம்தான் பொற்காலம் என்கிறார்கள். காரணம், விஜயகாந்த் தலைவராக இருந்தபோதுதான் நஷ்டத்தில் இருந்த நடிகர் சங்கத்தை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் வைத்து லாபத்தில் இயக்கியவர். அதோடு, அவர் விலகும்போது சேமிப்பையும் வைத்துவிட்டுச் சென்றார். விஜய்காந்த் தலைவராக இருந்தபோதுதான் சினிமா ஷூட்டிங்கில் பணியாற்றும் கடைநிலை ஊழியருக்கும் உணவளிக்கவேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்த வைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com