‘ஊனே உயிரே..!’ | காதல் - சாதி - ஆணவப் படுகொலைகள் - எழுத்தாளர் பெருமாள் முருகன்
“அப்பா! உண்மையில் அவரும் என்போல்
மனிதச் சாதி, மந்தி அல்லர்;
காக்கை அல்லர்; கரும்பாம்பு அல்லர் ”
“சாதி சற்றும் என்நினைவில் இல்லை
மாது நான் தமிழனின் மகள் ஆதலாலே ”
என்று பாவேந்தர் பாரதிதாசன் தனது கதைப் பாடல்களில் கலப்பு மணம் வாழ்க எனும் பிரிவில் எழுதுகிறார். ஆனால், சாதி கடந்து காதலித்ததற்காகவும், திருமணம் செய்ததற்காகவும் காதலர்கள் இப்போதும் படுகொலை செய்யப்படுகிறார்கள், தூக்கிலப்படுகிறார்கள், கொடூரமாக எரிக்கப்படுகிறார்கள். ஆணவக் கொலை என்பது வன்முறை அல்ல அக்கறை என்று பேசும் சூழலில் வாழ்ந்து வருகிறோம்.
காதலைக் கொண்டாடும் அதேவேளையில் காதல் காரணமாக நிகழ்த்தப்படும் ஆணவக்கொலைகளையும் நாம் பேசியாக வேண்டி இருக்கிறது. ஊனே உயிரே தொடருக்காக எழுத்தாளர், ஆய்வறிஞர் பெருமாள் முருகனைத் தொடர்பு கொண்டோம்.
சாதி கடந்த திருமணங்கள் சமூக அளவில் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது நிதர்சணம். ஆனால், முன்பிருந்த காலக்கட்டத்திற்கும் இப்போதிருக்கும் காலக்கட்டத்திற்கும் இடையே ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? ஏதேனும் முன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்கிறதா?
கட்டாயமாக முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது. அதிலொன்றும் சந்தேகம் இல்லை. இன்றைய காலக்கட்டத்தில் ஆணும் பெண்ணும் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. முந்தைய காலத்தில் அந்த வாய்ப்புகள் இல்லை. ஏதேனும் ஒரு கிராமத்தில் ஒரு பெண்ணோ ஆணோ பிறக்கின்றனர் என்றால், அந்த கிராமத்திற்குள்ளேயே அவர்களது வாழ்க்கை முடிந்துவிடும். அதிகபட்சம் 10 அல்லது 20 கிமீ சுற்றளவில் உள்ள சொந்தக்காரர்களை சந்திப்பதுதான் அவர்களது உலகின் எல்லை. அவர்களது உலகம் ஒரு கிணற்றுத்தவளை போன்றுதான் இருந்தது.
இன்று அப்படி இல்லை. எல்லோருக்கும் கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. குறைந்தபட்சம் பள்ளிக்கல்வியாவது கற்கின்றனர். அதற்காகவாவது வெளியில் செல்ல வேண்டிய தேவை உள்ளது. பின், உயர்கல்விக்கும் வேலைக்கும் வெளியில் வருகிறார்கள். உடலுழைப்பு சார்ந்த வேலைகள் என்றாலும் கூட வெளியூர்களுக்கு வருகிறார்கள். எனவே, அந்த வாய்ப்புகள் வரும்போது ஆணும் பெண்ணும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கிறது. ஒத்துப்போகின்றவர்கள் காதலிக்கின்றனர். இதனால், காதல் திருமணங்கள் அதிகரிக்கின்றது. இதற்குக் காரணம் அவர்கள் தங்களது ஊர், சொந்தம், சாதி போன்றவற்றைவிட்டு தேவைக்காக வெளியில் வருவதுதான் காரணம். அதனால் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
சமூகங்கள் காதல் திருமணங்களை அல்லது காதலை எப்படி எதிர்கொள்கின்றன?
நம் நாட்டில் சமூகங்கள் என்றால் அது சாதிதான். பல சந்தர்ப்பங்களில் ஒருவரது சாதியைக் குறிப்பிட சமூகம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். உதாரணத்திற்கு, ‘அவர் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்’ என சொல்லுவார்கள். அதனால், இங்கு சாதி என்பது சமூகம் என்றுதான் பொருள் கொள்ளப்பட்டது. ஆனால், இன்று அந்த முறை உடைந்துள்ளது. ஏனெனில், வேறு சாதிகளை சேர்ந்தவர்களுடன் பழகுவதற்கு சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுள்ளது. இன்று சமூகம் என்றால் எல்லா சாதிகளையும் சேர்ந்த மக்கள் என்ற அர்த்தத்தில்தான் பொருள் கொள்ளப்படுகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் ஆணவக் கொலைகள் சாதியினால் மட்டுமே அடையாளப்படுத்தப்படுவதாக எடுத்துக்கொள்ளலாமா?
அப்படியில்லை. ஆணவக் கொலைகளுக்கு 90% சாதிதான் காரணம். குறிப்பாக, காதலிக்கும் ஆணோ பெண்ணோ இருவரில் யாரோ ஒருவர் பட்டியலின சாதியைச் சேர்ந்தவராக இருந்தால், கட்டாயம் அது சாதி சார்ந்த ஆணவப் படுகொலையாகத்தான் இருக்கிறது. அதைத்தாண்டி, பொருளாதாரம், கௌரவம், பிள்ளைகள் தன் பேச்சைக் கேட்கவில்லை என்ற பெற்றோரின் தன் அகங்காரம் போன்றவை 10% காரணமாக இருக்கலாம். ஆனால், 90% ஆணவக் கொலைகளுக்குக் காரணம் சாதிதான். கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஆணவப் படுகொலைகளை எடுத்துப் பார்த்தீர்கள் என்றால் கூட அந்த புள்ளிவிபரங்களும் இதைத்தான் சொல்லும்.
சாதி கடந்து திருமணம் செய்துகொள்பவர்களது குழந்தைகள் எம்மாதிரியான சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள்?
சாதி கடந்து திருமணம் செய்தவர்கள் பல பிரச்னைகளை எதிர்கொள்ளும் அதேவேளையில், அவர்களது பிள்ளைகளும் பல பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். குறைந்தது, சாதிச் சான்றிதழ் வாங்குவதில் இருந்து பிரச்னைகள் ஆரம்பிக்கும். எந்த சாதியை குறிப்பிட வேண்டும் என்பதில் இருந்து ஆரம்பிக்கும். ஏனென்றால், இங்கு சாதி இல்லை என்றும் வாங்க முடியாது. சாதி இல்லை என்று சான்றிதழ் அளிப்பதும் இல்லை. விதிவிலக்காக, ஓரிருவர் பெரும் போராட்டங்கள் செய்து அத்தகைய சான்றிதழை வாங்கி இருப்பதாக சொல்கிறார்கள். பின், சாதி இல்லை என்று சான்றிதழ் வாங்கினாலும் அது பிரயோசனம் இல்லை. ஏனென்றால், நீங்கள் முற்பட்ட வகுப்பில்தான் சேருவீர்கள். இடஒதுக்கீடு போன்ற உரிமைகளை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் உங்களுக்கு சாதிச் சான்றிதழ் வேண்டும். அப்போது தாயின் சாதியோ அல்லது தகப்பன் சாதியோ குறிப்பிட்டாக வேண்டும். பெரும்பாலும், ஆணின் சாதியைத்தான் குறிப்பிடுகிறார்கள். ஏனெனில், ஆணை வைத்துதான் பிள்ளைகள் அடையாளப்படுத்தப்படும் ஆணாதிக்க சமூகமாக நம் சமூகம் இருக்கிறது. எனவே, சாதிச் சான்றிதழ் வாங்குவதில் இருந்தே பிரச்னைகள் தொடங்கிவிடுகிறது.
அடுத்ததாக, பிள்ளைகளுக்கு உறவுகள் பெரிதாக இருப்பதில்லை. பெரும்பாலும், காதல் திருமணங்களை இரு குடும்பங்களும் புறக்கணிக்கிறது. பிள்ளைகள் உறவுகள் என்ற வாசனையே இல்லாமல் வளர்கின்றன. நண்பர்கள் சாதி கடந்து உதவுவார்கள். ஆனால், உறவாவது என்பது நம் சமூகத்தில் கிடையாது. சாதி கடந்து திருமணம் செய்தவர்களது குழந்தைகளை நண்பர்களது குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைக்க விரும்பினால், பெரும்பான்மையான நண்பர்கள் தங்களது சாதிகளில் இருந்து வெளியில் வரமாட்டார்கள். இம்மாதிரியான பல சிக்கல்கள் அந்த பிள்ளைகளுக்கு ஏற்படுகிறது. சாதி கடந்து திருமணம் செய்தவர்களது பிள்ளைகள் எதிர்கொள்ளும் சிக்கல்களை நாம் பொதுத்தளத்தில் பேசுவதுகூட இல்லை. பேச வேண்டும்.
ஆணவக் கொலைகளை அரசியல் கட்சிகள் சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே கடந்து செல்கிறதா?
ஆணவக் கொலை மட்டுமல்ல.. சாதி சார்ந்த பிரச்னைகளையே சட்டம் ஒழுங்கு பிரச்னையாகத்தான் அரசும் பார்க்கிறது, அரசியல் கட்சிகளும் பார்க்கிறார்கள். எந்த எதிர்க்கட்சியாக இருந்தாலும் நாளை ஆட்சிக்கு வருவார்கள். அவர்களது பார்வை எல்லாம் சமூகத்தில் அமைதி நிலவ வேண்டும், சட்டம் ஒழுங்கு பிரச்னை வந்துவிடக் கூடாது என்றுதான் இருக்கிறது. இதுதான் சமூக அமைதிக்கான அளவுகோல் என நினைக்கின்றார்கள். எனவே, ஆணவக் கொலைகளை மூடி மறைக்கவும், சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே பார்ப்பதற்கான அணுகுமுறைகளைத்தான் அரசியல் கட்சிகள் வைக்கிறார்கள். அதனால், ஆணவப் படுகொலை அதிகரிக்கத்தான் செய்கிறது.
ஆணவப் படுகொலைகள் குறைய வேண்டுமானால், அரசியல் கட்சிகள் சாதி கடந்து திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் பெரியாரைப் பேசக்கூடிய, கம்யூனிசம், தலித் அரசியல் பேசக்கூடிய கட்சிகளாவது கலப்புத் திருமணங்கள் செய்துகொண்டவர்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும். அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்., அது மிக முக்கியம். ஏனென்றால், உறவுகள் முதற்கொண்டு எல்லோரும் கைவிட்டு விடுகிறார்கள். அவர்களுக்கு சரியான வேலை அமைவதில்லை. காதல் திருமணங்களில் பெரும்பாலானோர் கஷ்டப்படுவதற்குக் காரணம் பொருளாதார நெருக்கடிகளால்தான். எனவே, அரசியல் கட்சிகள் சாதி கடந்து திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பையும், அவர்கள் வாழ்வதற்கான வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
அடுத்ததாக, அவர்களது தற்கால சூழலில் இருந்து வேறு ஒரு சூழலுக்கு அவர்களைக் கொண்டு சென்று அவர்களை வசிக்க வைப்பதற்கான உதவிகளையும் செய்ய வேண்டும். இதெல்லாம் அரசியல் கட்சிகள் செய்ய வேண்டும். ஆனால், எந்த அரசியல் கட்சிகளும் அதைச் செய்வதில்லை. எல்லோரும் ஆணவக் கொலைகளை சட்டம் ஒழுங்கு பிரச்னையாக மட்டுமே பார்க்கின்றன.
சாதி மறுப்புப் திருமணங்கள் பெரியார் திடலில் சீர்திருத்தத் திருமணங்களாக மிக எளிமையான முறையில் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதேபோல் கம்யூனிஸ்ட் கட்சிகளில் சிறிய முறையில் மேடைகளிலும், கூட்டங்களிலும் திருமணங்கள் நடக்கிறது. அந்த முறைகள் சுத்தமாக இல்லை என்றெல்லாம் கூற முடியாது. முந்தையக் காலக்கங்களில் சுயமரியாதைத் திருமணங்கள் குறித்து பிரச்சாரம் செய்வதற்கான தேவை இருந்தது. ஆனால், அந்தக்காலக்கட்டம் இன்று இல்லை. நான் ஏற்கனவே சொன்னதுபோல் ஆண், பெண் சந்திப்பதற்கான வெளிகள் இன்று அதிகரித்துள்ளது. எனவே, திருமணங்களை சாதி கடந்து செய்துகொள்ளுங்கள் என பரப்புரை செய்வதற்கான தேவை இல்லை.
அதேவேளையில் சாதி ஒழிவதற்கான முக்கியமான வழி கலப்புத் திருமணங்கள்தான் என எல்லா சாதியினரும் பேசுகின்றனர். இம்மாதிரியான பேச்சுக்களுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுப்பதில்லையே தவிர அரசியல் கட்சிகள் பேசுகிறார்கள்.
சாதி கடந்த திருமணங்கள் நெடுங்காலமாக நடக்கிறது. அவர்களது குழந்தைகளை இங்குள்ள சாதிய அமைப்புகள் அதன் கட்டமைப்புக்குள்ளேயே கொண்டு வந்துவிடுகிறதே?
நான் முன்பே சொன்னதுபோல், சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களது குழந்தைகள் ஏதாவது ஒரு சாதிக்கு உட்பட்டுத்தான் இருக்க வேண்டி இருக்கிறது. தமிழ்நாடு அரசில் கலப்பு திருமணங்கள் செய்தவர்களுக்கான இடஒதுக்கீடு என்று இருந்தது., தற்போது அது நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், கலப்புத் திருமணம் செய்தவர்களில் ஆணோ, பெண்ணோ பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் அதில் இருக்கிறது. அப்படி திருமணம் செய்துகொண்டவர்கள் என்றால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதற்கான சாத்தியமும் அதில் இருந்தது. கலப்புத் திருமணம் செய்தவர்கள் என்ற சான்றிதழைக் கொடுப்பதையும் அவர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பதையும் வெகுவாக நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும். அப்படி வந்தால்தான் சமூக சூழல்கள் மாறும்.
கலப்பு திருமணங்கள் செய்துகொண்டவர்கள் இடஒதுக்கீட்டுக்காகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணத்திற்காகவோ ஏதேனும் ஒரு சாதிகளின் கீழ் செல்லும்போது, காலப்போக்கில் சாதிகள் அவர்களை உள்வாங்கிக் கொள்கிறதுதான்.
சங்க இலக்கியங்களில் இருந்த காதல்களுக்கும் தற்போதைய காதல்களுக்கும் இடையில் ஏதேனும் ஒற்றுமைகள் இருக்கிறதா?
ஒற்றுமைகள் அதிகமாகவும், வேற்றுமைகள் குறைவாகவும் இருக்கிறது. காதல் என்பது ஆதிகாலத்தில் இருந்து இருக்கக்கூடியது, மனிதர்களின் இயல்பான உணர்வு அது.
இருவரும் பார்த்துக் கொண்டவுடன் காதல் வந்தது என்பதெல்லாம் சங்க இலக்கயத்தில் இருந்திருக்கிறது. பிரிவில் தவிப்பது போன்ற விஷயங்களும் சங்க இலக்கியத்தில் இருக்கிறது. காதல் என்னும் உணர்ச்சி, அதுசார்ந்த விஷயங்கள் எல்லாம் இப்போதும் இருக்கிறது.
வேற்றுமை என்பது தற்போது காதலுக்கு சமூக ஏற்பு இல்லாதது. சங்க இலக்கியங்களில் எல்லாம் காதலுக்கான சமூக ஏற்பு இருந்தது. இன்று சாதி சார்ந்தும், பொருளாதார சூழல் சார்ந்தும் சமூக ஏற்பு காதலுக்கு இல்லை என்பதுதான் மிக முக்கியமான வேற்றுமை.
இறுதியாக, உங்களைப் பொருத்தவரை காதல்?
காதல் என்பது இயல்பான உணர்வு. காதலை இயல்பாக மலர்வதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். காதலை மறைத்து வைக்கவும், வெளிப்படுத்தினாலே குற்றம் என்று சொல்லக்கூடிய ஒழுக்கப்பார்வை என பல விஷயங்கள் காதல் இயல்பாக மலர்வதற்கான தடையாக இருக்கிறது. அப்படி இருக்கக்கூடாது. காதல் மலர்வதற்கு நாம் அனுமதிக்க வேண்டும்.