எளியோரின் வலிமை கதைகள் 10 : 'சிலர் வாடா போடானு கூப்டுவாங்க..கஷ்டமா இருக்கும்..ஆனாலும்..'

எளியோரின் வலிமை கதைகள் 10 : 'சிலர் வாடா போடானு கூப்டுவாங்க..கஷ்டமா இருக்கும்..ஆனாலும்..'
எளியோரின் வலிமை கதைகள் 10 : 'சிலர் வாடா போடானு கூப்டுவாங்க..கஷ்டமா இருக்கும்..ஆனாலும்..'

தேநீர் குடிப்பது என்பது பெரும்பாலும் நமக்கெல்லாம் ஒரு விருப்பமான ஒன்றாகவே இருந்து வருகிறது. சிலர் வீட்டில் தேநீர் அருந்துவதை விரும்புவார்கள். இன்னும் சிலர் தேநீர் கடைகளுக்கு சென்று தேநீர் அருந்துவதையே அதிகம் விரும்புவார்கள். பலதரப்பட்ட மக்களை ஒன்றிணைக்க ஒரு சந்திப்பாக தேநீர் கடைகள் விளங்குவது உண்டு. பெரும்பாலும் தேனீர் கடைகளில் அரசியல் பேசாதீர்கள் என்று போர்டுகள் வைத்திருப்பார்கள். ஒன்றிரண்டு கடைகளில் அரசியல் அதிகம் பேசப்படும் தேநீர் கடையும் ஒன்று.

ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட அரசியல் கருத்து இருந்தாலும், எல்லோருடைய கருத்துக்களையும் உள்வாங்கி கொள்ளக்கூடிய ஒருவராக அந்த தேநீர் கடையில் தேநீர் போட்டுக் கொடுக்கும் மாஸ்டர் திகழ்கிறார். அப்படிப்பட்ட தேநீர் கடை மாஸ்டர்களை சந்திக்க புறப்பட்டோம். விழுப்புரம் ரயில் சந்திப்பு நிலையம் அருகில் டீக்கடையில் வேலை செய்து வருகிறார் மாஸ்டர் வாசு. 30வயதான அவர் தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

"எனக்கு வயசு முப்பதாவதுங்க. 15 வயதிலிருந்து டீ கடையில வேலை செய்யறேன். அஞ்சாவது வரைக்கும் படிச்சிருக்கேன். ஆனாலும், எழுதப்படிக்க தெரியாது. குடும்ப கஷ்டம், அப்பா கிளி ஜோசியம் பார்க்கிறவர். தினமும் வருமானம் வரும் என்று சொல்ல முடியாது. இந்த நிலையில் தான் என்ன டீ கடையில் வேலைக்கு சேர்த்து விட்டாங்க. ஆரம்பத்துல கிளாஸ் கழுவுற வேலை தாங்க. ஒரு சில மாஸ்டர் அன்பா நடந்துக்குவாங்க. சில மாஸ்ட்டர்கள் வெறுப்பாக இருப்பாங்க. எல்லோரையும் அனுசரித்து விட்டு கொஞ்சம் கொஞ்சமா வேலையை கத்துக்கிட்டேன். யாரோ ஒருத்தருக்கு நம்மளால பசியாறுது, அப்படிங்கற திருப்தி.

டீ குடிக்க வர சில பேரு அநாகரிகமா பேசுவாங்க. டேய்னு கூப்பிடுவாங்க. யோவ்னு கூப்பிடுவாங்க, அப்பல்லாம் அவங்க மேல நமக்கு கோபம் வரும். ஆனா அதை வெளிக்காட்ட முடியாது. ஏன்னா முதலாளியின்னு ஒருத்தர் இருக்காரு. சிலர பார்த்தீங்கன்னா மாஸ்டர், மாஸ்டர் அப்படின்னு வாய்நிறைய கூப்பிடுவாங்க. அவங்கள பாக்கும்போது நம்மளை ஏதோ பெருமையா கூப்பிடுறாரு அப்படின்னு இருக்கும். நமக்கு அவங்க கொடுத்திருக்கிற பட்டம் அது ஒன்னு தாங்க. யாரா இருந்தாலும் குடிச்சிட்டு குடுக்குற கிளாஸ், ஒரு முறைக்கு இரண்டு முறை பச்சைத்தண்ணில கழிவிட்டு டீ போடுவதற்கு முன்னாடி ஒருமுறை பாய்லரிலிருந்து, சுடுநீரில் கழுவ சிலர் அதை உற்று கவனிப்பார்கள். ஏன்ன சுகாதாரம் ரொம்ப முக்கியம் இல்லையா?

நான் கிளாஸ் கழுவிட்டு டீ போட்டதுக்கு அப்புறம் என்கிட்ட அவர் டீயை வாங்கும்போது அவர்கிட்ட ஒரு அன்ப பார்க்க முடியும். நான் வேலைக்கு சேரும்போது 10 ரூபாய் 15 ரூபாயிலிருந்த சம்பளம். இப்போ ஒரு வகையா 600 ரூபாய் வரைக்கும் வந்துருச்சு. வேலை இல்லைன்னு யாரும் சொல்வது இல்லை. நான் கூட சில நேரங்கள்ல முடியாம வேலைக்கு வராமல் போய்டுவேன். அதுவும் ஒரு நாள், இரண்டு நாள் தான். ஏன்ன குடும்பம்னு ஒன்னு இருக்கு இல்ல. ஏதோ நம்ம படிப்புக்கு தகுந்த வேலை அப்படின்னு நினைச்சிக்கிட்டு, இந்த வேலை செஞ்சிட்டு இருக்கேன். ஆனா, ஒன்னு என் பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கணும். அது மட்டும் தான் எனக்கு பெரிய கனவா இருக்குது'' என்றார்.

இதேபோல மற்றொரு டீ மாஸ்டர் ஒருவர், 'டீ போட்றது ஒன்னும் அவ்ளோ சாதாரண விஷயம் இல்லைங்க' என அதில் உள்ள சிக்கல்களை நம்மிடம் கூறினார். ''என் பெயர் மணிகண்டன். வயசு 33 ஆகுது. நாலு வயசுல ஒரு பெண்குழந்தையும் மூணு வயசுல ஒரு ஆண்குழந்தையும் இருக்கிறாங்க. சொந்த ஊர் காணைகுப்பம். அஞ்சு வயசு இருக்கும்போது என்ன எங்க அப்பா பள்ளிக்கூடத்துக்கு கொண்டு போய் விட்டார். எனக்கு படிக்கிறது மேல பெரிய ஆர்வம் இல்லை. அதனால வீட்டை விட்டு ஓடி வந்துட்டேன். எங்க ஊரில் இருந்து 10 கிலோமீட்டர் தூரம்தான் விழுப்புரம். இங்க வந்து தெருவோரங்களில் சுத்தி திரிஞ்சேன். அப்புறம் ஒரு டீ கடையில டி எடுத்துக்கொண்டுபோய் குடுக்குற வேலை கொடுத்தாங்க. அப்ப எனக்கு சம்பளம் ஒண்ணேகால் ரூபாய். அப்படியே டீ கடை வேலை செஞ்சுகிட்டு, விழுப்புரத்தில் சாலையோரத்தில் இருக்குறவங்கள கொண்டுபோய் பராமரிக்கிற "சாந்தி நிலையம்" ம்னு ஒன்னு இருந்துச்சு. அங்கதான் போய் தங்கி இருந்தேன்.

10 நாள் தங்கி இருந்து டீக்கடையில் வேலை செஞ்சிட்டு இருந்த எனக்கு, திடீரென வீட்டு ஞாபகம் வந்துடுச்சு. அப்புறம் வீட்டுக்கு போயிட்டேன் வீட்ல அப்பா, அம்மா எல்லாம் ரொம்பவும் வருத்தப்பட்டாங்க. அப்பா பிளம்பர் தொழில் செய்றவரு. அவரு கூட வேலைக்கு போறதுக்கு எனக்கு விருப்பமில்லை. பள்ளிக்கூடத்துக்கும் போவல. அப்புறம் என்ன பார்த்த உள்ளூர்க்காரர் ஒருத்தரு என்ன ஒரு டீ கடையில வேலைக்கு சேர்த்து விட்டார். எனக்கு பத்து ரூபா சம்பளம். ஒரு ரூபாய் கூட எனக்காக எடுத்துக்க மாட்டேன். 300 ரூபா மாசம் வீட்டுக்கு கொடுத்திடுவேன்.

என் கூட பிறந்தவங்க மொத்தம் என்னோடு சேர்த்து 4 பேர். மூணு தம்பிகளையும் படிக்க வைக்கிறதுல என்னோட பங்கும் பெருசா இருந்துச்சு. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா கிளாஸ் கழுவறதேயிலிருந்து போடவும் கத்துகிட்டேன். டீ போடுறது சாதாரண வேலை இல்லைங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா கேப்பாங்க. ஒருத்தர் சர்க்கரை தூக்கலா கேட்பார், இன்னொருத்தர் ஸ்ட்ராங்கா கேட்பார், இன்னொருத்தர் மீடியமாக கேட்பார். இன்னும் சில பேர் பிளாக் டீ கேப்பாங்க. இப்ப எல்லாம் நிறைய பேரு கிரீன் டீ, லெமன் டீ ன்னு ஏகப்பட்ட வகையில டீ கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.

ஒவ்வொருத்தரையும் பார்த்து அவங்ளுக்கு தகுந்த மாதிரி டீ போடணும். தொடர்ந்து நம்ம கடைக்கு வர கஸ்டமர பார்த்துட்டு, அவங்க வந்த உடனே, நம்ம மூளை சரியா அவங்களுக்கு தேவையான அளவு சர்க்கரை, தேவையான அளவு டீத்தூள் அப்படின்னு, அவங்க வழக்கமா கேட்கிற டீ போட்டு கொடுத்துடுவோம். குடிச்சி முடிச்ச உடனே நல்லா இருந்துச்சுன்னா உடனே நம்மள பார்த்து சின்னதாக ஒரு புன்னகையை கொடுப்பாங்க. அதுதான் அவங்க நமக்கு கொடுக்கிற மிகப்பெரிய பாராட்டு.

டீ மாஸ்டரா இருக்கிறதுனால அவமானம்னு நான் நினைத்தது கிடையாது. எந்த தொழில் செய்தாலும் அந்த தொழில்தான், நம்ம குடும்ப கஷ்டத்தை போக்குது. அந்த தொழில் தான் நம்ம பிள்ளைகளை படிக்க வைக்குது. உதவியா இருக்குது அப்படின்னு நெனச்சுக்கிட்டு நான் வேலை செஞ்சு கிட்டு இருப்பேன். வெளியூரிலிருந்து வர்ர கஸ்டமர் யாரோ ஒருத்தர் நம்முடைய டீ யைசாப்பிட்டு பாராட்ட மாட்டாங்களா அப்படின்னு தினமும் தினமும் ஏங்கிக்கிட்டே இருப்பேன். ரெண்டு நாளைக்கு மூணு நாளைக்கு ஒருமுறை அப்படி ஒரு கஸ்டமர் டீ நல்லா இருக்குப்பா! அப்படின்னு சொல்றாருன்னா, அன்னைக்கு மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.

இப்படித்தாங்க ஒவ்வொரு நாளும் ஓடிக்கிட்டு இருக்கு. வேலை ரொம்ப கஷ்டம் தான் விடிய காலையில மூணு மணிக்கு வரணும். என் வயசு பசங்க எல்லாம் போர்வையை போத்திக்கொண்டு தூங்கிகிட்டு இருக்கிற இந்த வயசுல, நான் வேலைக்கு போறேன்னு நிறைய நேரம் நினைச்சதுண்டு. ஆனாலும் இந்த வேலையில பலருக்கு நம்ம உதவியா இருக்கிறோமோ அப்படின்னு ஒரு சந்தோஷம். அந்த கவலையை மறக்க வைத்திடும் எப்படியாவது என் பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கணும். அப்படிங்கற தாங்க என்னுடைய நோக்கம். எந்த தொழில் வேணும்னாலும் அழிந்து போயிடலாம். ஆனால் டீக்கடை எப்பயும் அழியாது என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. கொரோனா காலத்தில்கூட, கடைகள் எதுவும் திறக்கல அப்பயும் கேன்ல டீ வச்சுக்கிட்டு வீதிவீதியாக கொண்டுபோய் வித்தேன். ஏன்னா வயிறுன்னு ஒன்னு இருக்கு இல்ல'' என்கிறார் மணிகண்டன்.

சாதாரணமாக பேசுகிறார் நிகழ்வாக இருக்கட்டும், முக்கியமான திட்டங்களை தீட்டுகிறார் நிகழ்வாக இருக்கட்டும். தேனீர் இல்லாமல் அவை நடப்பதே இல்லை. என்பதை நாம் அறிவோம் அந்த வகையில் தேநீரை தயாரித்து கொடுக்கிற டீ மாஸ்டரின் வாழ்நிலை எப்படி இருக்கிறது என்பதையும் பார்த்தோம்.

-ஜோதி நரசிம்மன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com