நிதிஷ்குமாரின் நிஜ அரசியல்

நிதிஷ்குமாரின் நிஜ அரசியல்

நிதிஷ்குமாரின் நிஜ அரசியல்
Published on

நிதிஷ்குமார் தனக்கு நேற்று ஏற்பட்ட திடீர் ஞானோதயத்திற்கு மனசாட்சிப்படி நடந்து கொள்வதாக விளக்கமளித்தார். தனது முன்னாள் நண்பரும் எதிரியுமான லாலுபிரசாத்துடன் உறவைத் துண்டித்து முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, அடுத்த சில மணி நேரங்களிலேயே பாஜகவின் ஆதரவோடு மறுபடியும் முதலமைச்சராகியிருக்கிறார்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிதிஷ்குமார் மாறுவதற்கு ஒரு சில மணி நேரங்களே அவருக்குத் தேவைப்பட்டன. இத்தனை அவசரமாக அவர் முடிவெடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியர்வை நிறைந்த சட்டையை மாற்றுவதைப் போல அமைந்துள்ளது அவரது சந்தர்ப்பவாத முடிவு.

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள தனது துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், தான் நிரபராதி என்று நிரூபிப்பதில் தோல்வியடைந்து விட்டார் என்றும், அது தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் அதனால்தான் தனது பதவியை ராஜினாமா செய்ததாகவும் கூறினார் நிதிஷ். சிபிஐ பட்டியலிட்ட குற்றச்சாட்டுகளுக்கு தேஜஸ்வி பதிலாவது சொல்ல வேண்டும் என எதிர்பார்த்ததாகக் கூறினார். 

ஏற்கனவே ஊழல் புகாருக்கு ஆளான தேஜஸ்வியின் தந்தை லாலு பிரசாத், தன் மகன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் இட்டுக்கட்டப்பட்டவை என்றார். நிதிஷை அச்சுறுத்த மத்திய அரசு சிபிஐ-யை தனது அடிமையாகப் பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். "முதலில் அவர்கள் என்னைப் பார்த்து பயந்து போயிருந்தனர். தற்போது எனது மகனைப் பார்த்து அச்சமடைந்துள்ளனர்" என அவர் கேலியாகக் கூறியுள்ளார். ஆனால், நிதிஷ் தனது உடனடி ராஜினாமா மூலம் லாலுவுக்கு இருக்கும் அரசியல் தளத்தை இழக்கச் செய்திருக்கிறார் என்றுதான் தெரிகிறது. லாலு ஒரு புத்திசாலியான அரசியல்வாதி என்ற போதிலும் அவரது மகன் மீது அவர் வைத்திருந்த கண்மூடித்தமான பாசம், தன்னை நோக்கி வந்த பேரழிவை அவர் முன்கூட்டியே உணர முடியாமல் செய்து விட்டது.

சூழலைச் சாத்தியமாக்கும் கலைதான் அரசியல் என்றால், அந்தக் கலையில் நிபுணத்துவம் பெற்றவர் நிதிஷ். 2015ல் லாலுவோடு கூட்டணி வைத்த போதே நிதிஷுக்குத் தெரியும், லாலுவும் அவரது குடும்பத்தினரும் ஊழலில் சிக்கி இருக்கிறார்கள் என்று. மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் ஒரு கீழமை நீதிமன்றத்தால் லாலு தண்டிக்கப்பட்டார். அவரால் அரசில் பங்கேற்க முடியாது. ஆனால் அவரது குழந்தைகளை அரசில் திணிப்பார் என்பதெல்லாமே நிதிஷுக்குத் தெரியும். ஆனால் அப்போது அவர் லாலுவோடு கூட்டணி வைத்தார். அதை நியாயப்படுத்த மதவாதத்தை எதிர்க்க யுத்தம் என்ற துருப்புச் சீட்டை அவர் பயன்படுத்தினார். நரேந்திரமோடி அவரது நம்பர் ஒன் எதிரியானார். 

ஆனால் இப்போது 20 மாதங்களுக்குப் பிறகு ஊழல்தான் முக்கியமான பிரச்னை, அதை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியம் இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார். அவர் லாலுவுடன் இருப்பதை வைத்து மத்திய அரசு ஓயாமல் அடுத்தடுத்து ஏதேனும் குற்றச்சாட்டுகளைச் சொல்லி வருவது நிதிஷுக்கு அசௌகரியமாக இருந்தது. மோடியால்தான் அசௌகரியம் ஏற்படுகிறது என்ற போது, அவர் எதிரியாகவே இருந்தாலும் அவரையே அரவணைத்துப் போய்விடுவதைத் தவிர அந்த அசௌகரியத்தை வெல்வதற்கான வழி வேறு என்னவாக இருக்க முடியும். மெகா கூட்டணியை விட்டு வெளியேறும் தனது முடிவை நிதிஷ் அறிவித்த ஒரு சில நிமிடங்களில் பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டரில் அதை வரவேற்கிறார். ஊழலுக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம் என்கிறார். 

இதில் லாபமடைந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? நிதிஷ், தான் சூழலுக்கு ஏற்றவாறு தனது நிறத்தை மாற்றிக் கொள்ளும் சந்தர்ப்பவாதி என நிரூபித்திருக்கிறார். பாஜகவைப் பொருத்தவரையில் அதிகாரத்தைப் பெறுவதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் என நிரூபித்திருக்கிறது. மணிப்பூரில் காங்கிரசின் நட்பு எம்எல்ஏவை அணி மாற்ற அதனால் முடிகிறது. குஜராத்தில் வகேலா போன்ற காங்கிரஸ் அதிருப்தியாளர்களை பயன்படுத்த முடிகிறது. அதே போல தற்போது நிதிஷை அதனால் மனம் மாற்ற முடிந்திருக்கிறது. ஏற்கனவே குடும்பத்தினரும் தானும் ஊழல் வழக்குகளில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் இது லாலுவுக்கு மற்றுமொரு அடியாகத்தான் விழுந்திருக்கிறது. காங்கிரசைப் பொருத்தவரையில் நிரந்தரமாக பீகாரை இழந்து விட்டார்கள் போலவே தெரிகிறது. 2014 தோல்வியில் இருந்தே அவர்கள் மீண்டு வந்ததற்கான அறிகுறி தெரியவில்லை. லாலுவின் முதுகில் அமர்ந்துதான் அவர்கள் இதுவரை சிரித்துக் கொண்டிருந்தனர். தற்போது அவர்கள் அதலபாதாளத்திற்குச் சென்று விட்டனர்.  

ஒட்டுமொத்தமாக இந்தச் சூழ்நிலை எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 2015ல் பீகாரில் மெகா கூட்டணி அமைந்த போது இது மோடி பாஜக பரிவாரத்தை தேசிய அளவில் எதிர்ப்பதற்கான கூட்டணியை உருவாக்க அடித்தளமாக அமையும் என்ற எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை தற்போது சுக்குநூறாக நொறுங்கிப் போயிருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக - ஆர்எஸ்எஸ்க்கு எதிராக ஒரு கூட்டமைப்பை உருவாக்கி விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்தன. தற்போது அது முடிந்து போய் விட்டது. அதற்கு லாலு மட்டும் காரணமல்ல. இந்தி பேசும் மாநிலங்களில் காங்கிரசின் முந்தைய கூட்டணிக் கட்சிகள் மற்றும் தற்போதைய பாஜக எதிர்ப்பு முன்னணி கட்சிகள் அனைத்தும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகின்றன. லாலு மாயாவதியில் ஆரம்பித்து முலாயம் வரை அனைவருமே ஊழல் வழக்குகளை எதிர்கொள்கின்றனர். அப்படி மாட்டாதவர்களுக்கும் இருக்கவே இருக்கிறது சிபிஐ. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com