மரக்காணம் கலவரமும்; பொதுச்சொத்துகள் சேதமும் - வன்முறையை தூண்டுகின்றனவா கட்சிகள்?

மரக்காணம் கலவரமும்; பொதுச்சொத்துகள் சேதமும் - வன்முறையை தூண்டுகின்றனவா கட்சிகள்?
மரக்காணம் கலவரமும்; பொதுச்சொத்துகள் சேதமும் - வன்முறையை தூண்டுகின்றனவா கட்சிகள்?

அரசியல் கட்சித் தலைவர்கள் சமூகத்தின் மீதான கடமையை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும் போராட்டங்களில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

2013இல் வன்னியர் சங்கத்தினர் நடத்திய சித்திரை திருவிழாவின்போது ஏற்பட்ட மரக்காணம் கலவரத்தில் பேருந்துகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால், 2013 ஏப்ரல் 25ம் தேதி முதல் மே 19ம் தேதி வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேதத்தின் இழப்பை வசூலிப்பது தொடர்பாக பாமக தலைவர் ஜி.கே மணிக்கு அரசு போக்குவரத்துக் கழகம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி பாமக சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே மணி 2014இல் வழக்கு தொடர்ந்தார். அதில், கலவரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில் பாமகவினர் விடுதலை செய்யப்பட்டதாகவும், அரசியல் உள்நோக்கத்துடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தக் கலவரத்தின் போது 58 பேருந்துகள் சேதம் அடைந்ததாகவும், பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் போக்குவரத்துத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், தமிழ்நாடு பொது சொத்து சேதம் விளைவித்தல் தடுப்புச் சட்டப்படி, பொது சொத்துக்களை சேதம் ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், நிதி இழப்பு ஏற்படுத்தினாலும், சம்பந்தப்பட்டவர்களிடம் இழப்பீடு வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனவே அரசுக்கு ஏற்படுத்திய இழப்பீட்டை வசூலிக்க எவ்வித தடையும் இல்லை எனவும் நீதிபதி குறிப்பிட்டார். அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு பாமக தரப்பில் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதி, நோட்டீசை ரத்து செய்ய மறுத்துவிட்டார்.

மேலும், கலவரம் தொடர்பாக போக்குவரத்துத்துறை அனுப்பிய நோட்டீசுக்கு விளக்கமளிக்குமாறு பாமகவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த விசாரணையை 4 மாதத்தில் முடிக்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். அரசியல் கட்சித் தலைவர்கள் சமூகத்தின் மீதான கடமை உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் போராட்டங்கள் நடத்தும்போது ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நீதிபதி அறிவுறுத்தினார். மேலும் பொதுச் சொத்துக்களை சேதம் விளைவித்தல் சட்டத்தை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப வருவாய் நிர்வாக ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் கூறுகையில், ''நீதிமன்றம் கூறியிருப்பது வரவேற்க்கத்தக்கது. ஜனநாயகத்துக்கு உட்பட்டு போராட்டம் நடத்துவது குடிமகனின் உரிமை. போராட்டத்துக்கான நோக்கத்தை வெளிப்படுத்துவதற்கு எந்த அளவுக்கு உரிமை இருக்கிறதோ, அதே அளவுக்கு பொதுச்சொத்துகளை சேதமில்லாமல் பாதுகாப்பதற்குமான பொறுப்பும் உள்ளது. அப்படி சேதம் ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை அரசியல் கட்சிகள் கொடுக்க வேண்டும். இந்த சட்டம் கடுமையாக அமல்படுத்த வேண்டும். இழப்பீடு தர தாமதப்படுத்தினால் கட்சி அலுவலகங்களை ஜப்தி செய்ய வேண்டும். அப்போதுதான் அதற்கான முக்கியத்துவம் புரியும். மக்கள் நலன் இதில் பாதுக்காப்பட வேண்டும். அரசியலை நுழைக்க கூடாது. சிறைத்தண்டனை காட்டிலும் இழப்பீடு தான் முக்கியமானது. சிறையாக இருந்தால் தப்பிக்க வாய்ப்பிருக்கிறது. கட்சியின் நிதிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இழப்பீடுதான் சரியானது.

சட்டம் காலங்காலமாக இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் அவை முறையாக பின்பற்றப்படுவதில்லை. சில நாடுகளில் முறையாக போராட்டம் நடத்துகிறார்கள். போராட்ட வடிவமே அவர்களிடம் வேறுமாதிரியாக இருக்கிறது. சில நாடுகள் மௌன போராட்டங்களும் நடக்கின்றன. அவை அரசையே பணிய வைக்கின்றன. போராட்டம் என்பது அரசை எதிர்த்துதானே தவிர, மக்களின் வரிப்பணத்தால் ஓடும் அரசு சொத்துகளை சீர்குலைப்பதற்காக அல்ல. பல இடங்களில் போராட்டம் என்ற பெயரில் ரயில்களை நிறுத்துவது எந்த வகையில் நியாயம்? இந்த விவகாரங்களில் நாம் தயவு தாட்சணை காட்ட முடியாது. மக்களுக்கு உரிமையானதை யாரும் சேதப்படுத்தக்கூடாது. சேதப்படுத்தவும் முடியாது. அப்படி சேதப்படுத்துபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்'' என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com