\
ஓடிடி திரைப்பார்வை 12 : நல்ல காட்சி அனுபவத்தைக் கொடுக்கும் ‘கயமை கடக்க’.

ஓடிடி திரைப்பார்வை 12 : நல்ல காட்சி அனுபவத்தைக் கொடுக்கும் ‘கயமை கடக்க’.

ஓடிடி திரைப்பார்வை 12 : நல்ல காட்சி அனுபவத்தைக் கொடுக்கும் ‘கயமை கடக்க’.
Published on

சினிமா என்பது One Man Art இல்லவே இல்லை, நடனம் போல ஓவியம் போல பாடல் பாடுவது போல ஒரு தனிமனிதர் தன் திறைமையை வெளிப்படுத்தும் கலை அல்ல இந்த சினிமா. இது ஒரு குழுவின் கலை. இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசை உள்ளிட்ட இன்னபிற பிரிவுக் கலைஞர்கள் இணைந்து ஒரு படைப்பை உருவாக்குகின்றனர். அதனால் தான் சினிமா தனித்துவமான கலையாக இந்நூற்றாண்டின் கலையாக விளங்குகிறது.

கயமை கடக்க எனும் த்ரில்லர் சினிமா Movie Saints எனும் ஓடிடிதளத்தில் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் கிரண்.ஆர் இயக்கியிருக்கும் இந்த சினிமா வட்சன் எம் நடராஜன், மாசாந்த் நடராஜன், நாகராஜன் கண்ணன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். பெண்களை பாலியல் கொடுமை செய்யும் குற்றவாளிகளை சந்தோஷ் தேடித் தேடி கொலை செய்கிறார். அவருக்குள் இருக்கும் மல்டிபில் பர்ஷனாலிட்டி கதாபாத்திரம் அடிக்கடி வெளியே வந்து தன் செயல்களுக்கு எதிராக பேசுகிறது. பிறகு அதன் கதாபாத்திர நிலை மாறி மாறி பயணிக்கிறது. சந்தோஷ் எனும் இன்னொரு கதாபாத்திரத்தில் மாசாந்த் நடராஜன் நடித்திருக்கிறார்.

இப்படத்தின் மிக முக்கிய பலமாக ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பைக் கூறலாம். சுந்தர் ராம் கிருஷ்ணன் தன் ஒளிப்பதிவின் மூலம் ஒவ்வொரு ப்ரேமையும் சர்வதேச தரத்தில் செதுக்கியிருக்கிறார். கூடுதல் லைட்களின் உதவிகளை குறைத்து முடிந்த மட்டும் அவைலபில் லைட்டில் மிகச் சிறப்பாக இந்த சினிமாவை படம்பிடித்திருக்கிறார். ஒளிஅமைப்பு மட்டுமல்ல ஷாட் கம்போஸிங் கூட மிக நுட்பமாக கோர்வையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. கிரண்.ஆர் இப்படத்தின் இயக்குநராக மட்டுமல்ல அவரே இப்படத்தின் ஒலிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு வேலைகளையும் செய்திருக்கிறார். தொழிநுட்ப அணுகுமுறை சார்ந்து பாராட்ட இப்படத்தில் நிறையவே விசயங்கள் உண்டு. சாந்தன் அன்பழகனின் பின்னனி இசை ஓகே ரகம். அப்படியே மாசாந்த் நடராஜனின் நடிப்பும் பாராட்டத்தகக்து. தன் தம்பியை துப்பாக்கி முனையில் கேள்வி கேட்கும் போது தன் கண்களில் பொங்கும் கண்ணீரை அடக்க முடியாமல் அவர் காட்டும் முகபாவம் அருமை.

க்ரவுட் பண்டிங் முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சினிமாவில் எல்லாம் சரியாக இருந்தும் கதைக் கருவில் மிகப் பெரிய தவறை இயக்குநர் செய்திருப்பதாக தோன்றுகிறது. பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை தனிநபர் ஒருவர் சுட்டுக் கொலை செய்கிறார். கொலையே பாலியல் குற்றங்களுக்கு தீர்வு என ஒன்வே கம்யூனிகேஷனாக தனது வாதத்தை கிரண்.ஆர் முன்வைத்து பேசுகிறார். ஆனால் அதற்கு எதிர்தரப்பு கருத்துகளை பேசுவதற்கான கதாபாத்திரங்களையும் சேர்த்து உருவாக்கி திரைக்கதை அமைத்திருந்தால் இன்னுமே இந்த சினிமா நன்றாக வந்திருக்கும். எந்த ஒரு சமூக பிரச்னைக்கும் வேர் என ஒன்று இருக்கும் அந்த வேர் குறித்த குறைந்த பச்ச அறிமுகங்களை இயக்குநர் பேசி இருக்கலாம். கூடவே பேஸ்புக் போராளிகளின் நிஜமுகம் மாறுபட்டது என்ற வாதத்தையும் முன்வைக்கிறார் கிரண்.ஆர் அது ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடியதே. வசங்களும் பல இடங்களில் கவனிக்கத்தக்கதாக அமைந்திருக்கிறது. கதை முழுக்க கோவையைச் சுற்றி நடப்பதாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. என்னதான் கோவை க்ளைமேட் நன்றாக இருக்கும் என்றாலுமே கூட படம் முழுக்க சீரியல் கில்லர் லெதர் ஜாக்கட் அணிந்து வலம்வருவது உறுத்தல்.

ஒரு மாற்று சினிமா மீது, ஒரு குழு முயற்சியின் மீது நமக்கு நிறைய விமர்சனங்கள் இருக்கலாம். அதே நேரம் சின்ன பட்ஜட்டில் சர்வதேச தரத்தை எட்டிப் பிடித்திருக்கும் கிரண்.ஆர் குழுவினர் போன்ற புதிய படைப்பாளிகளுக்கு குறைகளை சுட்டிக் காட்டுவதோடு மட்டுமல்லாமல் தோள் தட்டி உற்சாகப்படுத்த வேண்டியதும் நமது கடமை.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com