‘காலா’ பாடல்கள் நில உரிமை, ஒடுக்கப்பட்டவர்கள் வலி, சமகால அரசியல், மதவெறி என எதிர்ப்புக் குரலாகவே ஒட்டுமொத்தமாக ஒலிக்கிற ஆல்பம்.
கற்றவை;பற்றவை பாடல்
பாடல்வரிகள்: அருண்ராஜா, கபிலன், ரோசன் ஜேம்ராக். பாடர்கள்: யோகி பி, அருண்ராஜா, ரோசன் ஜேம்ராக்.
‘ஒத்ததல ராவணா, பத்துதல ஆகுடா’ என குறியீட்டு அரசியலோடு தொடங்கி ‘வறுமை எனும் நோயைப் போக்கவா, வரப்புகளை வயல்களாக்கவா’ என ரஜினியை அரசியலுக்கு வரவேற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இடையிடையே வரும் ரஜினி குரல் ‘மாஸ்’. ரஜினியின் அரசியல் மேடைகளில் இனி இப்பாடல் நிச்சயம் கேட்கும்.
‘நிக்கல் நிக்கல்’ பாடல்
பாடல்வரிகள் : டோப்படெலிக்ஸ் குழு, லோகன் பாடகர்கள்: டோப்படெலிக்ஸ் குழு, அருண்ராஜா காமராஜ், விவேக்
ரஜினியின் கோட்டையாக திகழும் கதைக்களம், கதை மாந்தர்களின் புகழ் பாடும் பாடல். துள்ளல் வகையில், தாராவி பகுதி இசைக் கலைஞர்களே ராப் பாணியில் உருவாக்கியிருப்பது ரசிக்க வைக்கிறது.
போராடுவோம் பாடல்
பாடல்வரிகள்: டோப்படெலிக்ஸ் குழு, லோகன் பாடகர்கள்: டோப்படெலிக்ஸ் குழு
‘நிலம் எங்கள் உரிமை’ என ஒடுக்கப்பட்டவர்களின் குரலாய் தொடங்கி அழிக்க நினைக்கும் போது போராடுவோம் என வெகுண்டெழும் வகையில் உருவாகியுள்ள பாடல். ஆன்மிக அரசியலை முன்னெடுப்பதாக அறிவித்த ரஜினிக்கு விமர்சனங்கள் வந்த நிலையில், மத அரசியல் உள்ளிட்ட சமகால அரசியலும் பாடலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உரிமையை மீட்போம் பாடல்
பாடல் வரிகள்: அறிவு பாடகர்கள்: விஜய் பிரகாஷ், அனந்து.
“யார் வச்சது உன் சட்டமடா” என்று அதிகாரத்தை கேள்வி கேட்கும் பாடல். ஒரு சமூகத்தின் நிலம் சுரண்டப்படுதலின் வலியை அழுத்தம் திருத்தமாய் பதிவு செய்யும் வரிகள், கதை நிகழும் தாராவி பகுதி மக்களின் ஒட்டுமொத்த குரலாகவும் ஒலிக்கிறது.
செம்ம வெய்ட்டு பாடல்
பாடல் வரிகள்: டோப்படெலிக்ஸ் குழு, அருண்ராஜா பாடகர்கள்: சந்தோஷ் நாராயாணன், ஹரிஹரசுதன்
நாயகனின் புகழ்பாடும், அவனைக் கொண்டாடும் பாடல். ரஜினியின் இமேஜுக்கு எந்த குறையும் வைக்காமல் உருவாக்கப்பட்டுள்ளது.
தெருவிளக்கு பாடல்
பாடல் வரிகள்: டோப்படெலிக்ஸ் குழு, லோகன் பாடகர்கள்: டோப்படெலிக்ஸ் குழு, முத்தமிழ்
பா.ரஞ்சித்தின் ஆக்ரோஷமான சமீபகால மேடைப் பேச்சுகளை பிரதிபலிக்கும் பாடல். கல்வியின் அவசியத்தையும் பேசுகிறது.
தங்க செல பாடல்
பாடல் வரிகள்: அருண்ராஜா காமராஜ் பாடகர்கள்: சங்கர் மகாதேவன், அனந்து, பிரதீப்
கணவன், மனைவியாக நடித்துள்ள ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ் இடையிலான அன்பின் மகத்துவம் சொல்லும் பாடல். நெத்தி பொட்டு மத்தியில் என்னத் தூக்கி வச்சவளே என காதலைக் கொண்டாடும் பாடல். முதல்முறையிலேயே மனதில் ஒட்டிக்கொள்ளும் ரகம்.
கண்ணம்மா பாடல்
அக்மார்க் சந்தோஷ் நாராயணன் மெலடி. உன் காதல் வாசம் எனும்போது கேட்கும் மனங்களில் அதை உணர முடிகிறது. தீ, பிரதீப், அனந்து கூட்டணியின் குரல்கள் மேஜிக் மெஸ்மரிசம். உமாதேவியால் மட்டுமே மீட்டாத வீணை, தருகின்ற ராகம் என்றெல்லாம் பாடல் வடிக்க முடியும். இதுதான் நிச்சயம் எல்லோருக்கும் ‘ஃபேவரிட்’ பாடலாக இருக்கும்.