‘சில்வர் ஜூப்ளி’ நாயகி ஜெயலலிதாவின் அதிகம் அறியப்படாத சினிமா பக்கங்கள்!

‘சில்வர் ஜூப்ளி’ நாயகி ஜெயலலிதாவின் அதிகம் அறியப்படாத சினிமா பக்கங்கள்!
‘சில்வர் ஜூப்ளி’ நாயகி ஜெயலலிதாவின் அதிகம் அறியப்படாத சினிமா பக்கங்கள்!

இன்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் கொண்டாடப்படும் வேளையில், அவருடைய திரையுலக வாழ்வைப் பற்றி இந்த தொகுப்பில் அறிந்துகொள்வோம்.

தமிழ் சினிமாவில் 1960-காலகட்டத்தில் நடிகையாக அறிமுகமானவர் ஜெயலலிதா. சிறுவயதிலேயே தந்தை ஜெயராமனை இழந்த அவருக்கு, தூணாக துணை நின்றவர் தாய் வேதவள்ளி. ஜெயலலிதாவின் குடும்பம் சென்னையில் குடியேற, ’சந்தியா’ எனும் பெயரில் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார், அவரின் தாயார். சென்னை சர்ச் பார்க் பள்ளியில் கல்வி பயிலத் தொடங்கிய ஜெயலலிதா, படிப்பில் படுசுட்டியாகத் திகழ்ந்தார். கல்வியோடு கலையையும் கற்றுக் கொண்ட அவர், பரதநாட்டியத்தை கற்றுத் தேர்ந்தார். அவரின் நடன நிகழ்ச்சிகள் இல்லாமல் பள்ளியின் கலை நிகழ்வுகள் நிறைவு பெற்றதே கிடையாது என்ற அளவுக்கு நடனத்தால் அனைவரையும் கவர்ந்தார் ஜெயலலிதா. நாட்டியத்தில் நாட்டம் கொண்ட அவர், நடிப்புலகில் கோலோச்சும் பெரும் நாயகியாவார் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

1965ஆம் ஆண்டு வெளியான ’வெண்ணிற ஆடை’ திரைப்படம்தான், தமிழில் அவரின் அறிமுகப் படைப்பு. ஸ்ரீதரின் இயக்கத்தில் உருவான இப்படம், ஜெயலலிதாவுக்கு மட்டுமின்றி வெண்ணிற ஆடை மூர்த்தி, வெண்ணிற ஆடை நிர்மலா என பல முக்கிய நடிகர்களுக்கு சினிமா விசிடிங் கார்டு என்றே சொல்லலாம். ஜெயலலிதாவின் தமிழ் அறிமுகம் ’வெண்ணிற ஆடை’ என்றாலும் அதற்கு முன்பே CHINNADA GOMBE, MANE ALIYA என்ற இரு படங்கள் கன்னடத்தில் அவருக்கு வெளியாகிவிட்டன. நடிப்பின் மீது ஆர்வம் அதிகரித்ததால் மேடை நாடகங்களில் பல பெர்ஃபாமன்ஸ்களைக் கொடுத்து பெயர் வாங்கத் தொடங்கினார், ஜெயலலிதா. தன் தாயோரோடு இணைந்து நாயகியாக அவர் நடித்த 'அன்டர் செகரட்ரி' திரைப்படம் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தந்தது.

’வெண்ணிற ஆடை’ கொடுத்த வெற்றியின் காரணமாக, தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஓபனிங் ஜெயலலிதாவுக்கு கிடைத்தது. எந்தளவுக்கு என்றால், அந்த ஒரு ஆண்டில் மட்டும் 23 படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார் ஜெயலலிதா. அப்பட்டியலில், எம்.ஜி.ஆரின் ’ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம், க்ளாசிக் ஹிட் வரிசையில் இடம்பிடித்துவிட்டது. மாபெரும் வெற்றிப்படைப்பாக மாறிய ’ஆயிரத்தில் ஒருவன்’, தமிழ் சினிமாவில் ஒரு புது அத்தியாயத்தை உருவாக்கியது. அதன்பின் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த எல்லா படங்களுக்கும் எல்லையில்லா வரவேற்பு கிடைத்தது. அடுத்த 8 வருடங்களில் இருவரும் இணைந்து நடித்த 28 திரைப்படங்கள் மெகா ஹிட் ஆனதோடு, வசூலில் சாதனை படைத்தன. எம்.ஜி.ஆர் மட்டுமின்றி அன்றைய காலகட்ட ஹீரோக்களான ஜெய்சங்கர், முத்துராமன் உள்ளிட்ட முக்கிய நடிகர்களுடன் இணைந்து ஹிட் கொடுத்த ஜெயலலிதா, திரைத்துறையின் தவிர்க்க முடியாத ஹீரோயின் ஆனார்.

தமிழைப் போலவே தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரமான என்.டி.ஆர் உள்ளிட்டோருடன் ஜெயலலிதா நடித்த திரைப்படங்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்தது. எம்.ஜி.ஆருடன் இணைந்து ஹிட் கொடுத்ததைப்போல் சிவாஜி கணேசனுடன் நடித்த பல படங்கள், வெற்றிப் படைப்புகளாயின. ஜெயலலிதாவும்-சிவாஜியும் இணைந்து 17 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். இவ்விருவரின் நடிப்பில் வெளியான ’பட்டிக்காடா பட்டணமா’ திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைத்தது. அதே படத்தில் சிறந்த நடிப்பை கொடுத்ததற்காக ஃபிலிம் ஃபேர் விருதையும் தட்டிச் சென்றார் ஜெயலலிதா. ’சந்திரோதயம்’, ’அடிமைப் பெண்’, ’எங்கிருந்தோ வந்தாள்’ உள்ளிட்ட படங்களுக்காகவும் ஃபிலிம் ஃபேர் விருதும் ஜெயலலிதாவை தேடி வந்தது.

’தங்க கோபுரம்’, ’ராமன் தேசிய சீதை’, ’திருமாங்கல்யம்’, ’சூரியகாந்தி’ உள்ளிட்ட திரைப்படங்களுக்காக தமிழக அரசின் விருதுகளாலும் கவுரவிக்கப்பட்டார் ஜெயலலிதா. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால், ’திருமாங்கல்யம்’ அவரின் 100ஆவது திரைப்படமாகும். அதுவரை நடிகையாக மட்டுமே பயணித்துக் கொண்டிருந்த ஜெயலலிதா அப்படத்தில் 3 பாடல்களைப் பாடி, பாடகியாகவும் உருவெடுத்தார். ’திருமாங்கல்யம்’ திரைப்படம் அவரின் திரைப்பயணத்தில் புது திருப்புமுனையைத் தந்தாலும், எம்.ஜி.ஆருடன் இணைந்து அவர் நடித்த ’அடிமைப்பெண்’தான், பாடலுக்காக தனி பிரபலத்தை அவருக்கு தேடித்தந்தது.

சினிமாவில், நடிகையாக ஜெயலலிதா செய்த சாதனைகள் பல உள்ளன. ஒரு திரைப்படம் திரையரங்கில் 25 வாரங்களுக்கு மேல் ஓடினால் அதனை சில்வர் ஜூப்ளி என்பார்கள். அப்படி, ஜெயலலிதா தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்த 92 திரைப்படங்களில், 85க்கும் மேற்பட்ட படங்கள் சில்வர் ஜூப்ளி படமாக ஹிட் ஆனது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் அவர் நடித்த 25க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் சில்வர் ஜூப்ளி ஹிட் வரிசையில் சேர்ந்துகொண்டது. ப்ளாக் அண்ட் ஒயிட் காலகட்டம் தொடங்கிய தென்னிந்திய சினிமாவின் வரலாற்றில் வெற்றி நாயகியாக இடம்பிடித்தார் ஜெயலலிதா. 1965ஆம் ஆண்டு அறிமுகமானது முதல் 1980ல் சினிமாவில் இருந்து விலகி அரசியலில் இணையும் வரை அதிக சம்பளம் வாங்கிய உச்ச நட்சத்திரமாகவே திகழ்ந்தார், இந்த வெற்றி நாயகி.

சினிமாவில் பல சாதனைகளை நிகழ்த்திய ஜெயலலிதா 1980ஆண்டு ’நதியை தேடி வந்த கடல்’ எனும் திரைப்படத்தோடு திரைத்துறையில் கவனம் செலுத்துவதை நிறுத்திக் கொண்டார். அதைத் தொடர்ந்து 2 ஆண்டுகள் இடைவெளிக்குப்பின் 1982ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்து தன் அரசியல் பயணத்தைத் தொடங்கினார், ஜெயலலிதா. சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் தடம் பதித்த ஜெயலிதா உலகை விட்டுப் பிரிந்தாலும், சினிமா எனும் கால இயந்திரத்தின் மூலம் ரசிகர்களின் இதயங்களில் என்றுமே வாழ்ந்துகொண்டே இருப்பார்.

- புனிதா பாலாஜி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com