'கிரிக்'கெத்து 10: பாகிஸ்தானை ஃபீல்டிங்கிலேயே வீழ்த்திய 'பறக்கும் மனிதன்' ஜாண்ட்டி ரோட்ஸ்!

'கிரிக்'கெத்து 10: பாகிஸ்தானை ஃபீல்டிங்கிலேயே வீழ்த்திய 'பறக்கும் மனிதன்' ஜாண்ட்டி ரோட்ஸ்!
'கிரிக்'கெத்து 10: பாகிஸ்தானை ஃபீல்டிங்கிலேயே வீழ்த்திய 'பறக்கும் மனிதன்' ஜாண்ட்டி ரோட்ஸ்!

1992 உலகக் கோப்பை தொடர் முழுவதுமே மிகவும் சுவாரஸ்யமானதுதான். இப்போதைய 2K கிட்ஸ் பலருக்கும் அக்காலத்தில் அசத்திய சில வீரர்களை பற்றியே தெரியாது. அதிலும் இப்போது கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்தும் தென்னாப்பிரிக்கா அணி முதல் முறையாக பங்கேற்றதும் 1992-ல் தான். அதற்கு முன்பு வரை தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி எந்தவொரு உலகக் கோப்பையிலும் பங்கேற்றதில்லை. 1992-ம் ஆண்டில்தான் கெப்லர் வெசல்ஸ் தலைமையில் இளம் வீரர்களை கொண்ட அணி களமிறங்கியது. எல்லோரும் தென்னாப்பிரிக்காவை கத்துக்குட்டியாக நினைத்திருந்த நிலையில், 16 அடி பாய்ந்தது அந்த அணி.

அந்தத் தொடர் முடியும்போது பல ஜாம்பான்களை அந்த அணி கிரிக்கெட் உலகுக்கு கொடுக்கும் என்று யாரும் நினைத்துப் பார்க்கவில்லை.
அதுவும் 1992 உலகக் கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் லீக் சுற்றுடன் நடையை கட்டி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தத் தொடரின் லீக் போட்டிகள் முடிவில் அரையிறுதியில் 4 அணிகள் முன்னேறின. அதில் நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதிப் பெற்றன. இந்த நான்கு அணிகளில் தென்னாப்பிரிக்கா இடம்பெறும் என யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள்.

குறிப்பாக, அந்தத் தொடரில் தான் பங்கேற்ற 8 போட்டிகளில் 5-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் மூன்றாம் இடத்தைப் பிடித்து மற்ற அணிகளுக்கு கிலியூட்டியது தென்னாப்பிரிக்கா. இப்போதுள்ள ஃபீல்டிங் தரத்தை முதல்முறையாக அப்போதே செட் செய்த அணி தென்னாப்பிரிக்கா. நவீன கால கிரிக்கெட்டில் ஃபீல்டிங்கும் ஃபீல்டரும் எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணமானது அந்த அணி. அதிலும் ஜாண்ட்டி ரோட்ஸ் எனும் மாயாவியோ ஃபீல்டிங் எப்படி இருக்கவேண்டும் என்று உலகத்துக்கு அறிவித்த கெத்தான தருணம் நிகழ்ந்தது.

சூப்பர் 'ஃப்ளாஷ் பேக்'

1992 ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் மைதானத்தில் 22-வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதின. அதில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்புக்கு 211 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஆண்ட்ரூ ஹட்சன் 54, ஹான்சி குரோனியே 47 ரன்களை எடுத்தனர். '211 ரன்கள்தான்... பாகிஸ்தானின் பேட்டிங் அசுரன்கள் ஊதித் தள்ளிவிடுவார்கள்' என்றே பலரும் நினைத்தனர். ஆனால், நினைத்தது எல்லாமே பொய்யானது. ஆட்டத்தை தொடங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஆமிர் சொஹைல், சாஹித் பசல் ஆகியோர் விரைவாக ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த இன்சமாம் உல் ஹக் மற்றும் கேப்டன் இம்ரான் கான் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வந்தனர்.

பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் என வலுவான நிலையில் இருந்தது. அப்போது இன்சமாம் 43 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பிரயன் மெக்மில்லன் வீசிய ஒரு பந்தை, இன்சமாம் அடிக்க முயற்சி செய்வார்... ஆனால், பந்து பேட்டில் படாமல், காலில் பட்டுச் சென்றுவிட்டது. உடனே, ரன் எடுப்பதற்காக இன்சமாம் ஓடினார். இம்ரான் கான் 'வேண்டாம்' என்று நின்றுவிட, பந்து ஜாண்ட்டி ரோட்ஸ் கைகளில் இருக்க, இன்சமாம் திரும்பி கிரீஸ் நோக்கி ஓடுவார். எல்லோருமே ரோட்ஸ் ஸ்டம்பை நோக்கி அடிப்பார் என்று எதிர்பார்த்தனர். ஆனால், ரோட்ஸ் அடுத்து செய்யப்போவது சாகசம் என தெரியாது.

அப்போது, ஸ்டம்புக்கு அருகே வேறு தென்னாப்பிரிக்க வீரர்கள் இல்லாததால், அவரே ஸ்டம்புகள் நோக்கி வேகமாகப் பாய்ந்தார். ஒரு கழுகு வானத்தில் இருந்து பறந்து வருவது போல காற்றில் பறந்து ஸ்டம்பை வீழ்த்தினார். இன்சமாம் கிரீஸுக்குள் நுழைவதற்கு முன்பே, ஸ்டம்புகள் மீது பாய்ந்து அவரை ரன் அவுட் செய்தார். அசாத்தியமான சம்பவம் அது.

இப்போது வரை கிரிக்கெட் உலகில் அந்த ரன் அவுட் ஒரு மாஸ்டர் க்ளாஸாக போற்றப்படுகிறது. இந்த கெத்தான ஃபீல்டிங் தருணம் கிரிக்கெட் உலகையே நடுங்கவைத்தது மட்டுமல்லாமல், பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 173 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவ வைத்தது. கிரிக்கெட் உலகின் ஃபீல்டிங்குக்கு பிதாமகனாக ஜாண்ட்டி ரோட்ஸை மாற்றியது அந்தத் தருணம்தான்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com