''நிச்சயம் மூன்றாவது அலையின் தன்மையை நிர்ணயிக்கப்போகும் முக்கியமான அம்சமாக இருக்கப்போவது "தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டோர்" சதவிகிதம் என்பது புலனாகிறது. தற்சமயம் இந்திய அளவில் 70 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி கண்டறியும் ஆய்வில், 28,975 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் 67.6% பேருக்கு கொரோனா தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவ ஊழியர்களிடையே 85% எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது உண்மையிலேயே நற்செய்தியாகும். காரணம் முதல் இரண்டு அலைகளின் மூலமும் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் பயனாகவும் நாட்டில் சுமார் 90 கோடி பேருக்கு கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருக்கிறது. ஆயினும் இன்னும் சுமார் 40 கோடி மக்களுக்கு தொற்று ஏற்படவில்லை. எனவே மூன்றாம் அலை குறித்து பேரச்சமும் தேவையில்லை. அலட்சியமும் தேவையில்லை. எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நிச்சயம் நம்மைக்காக்கும் கேடயமாக இருக்கும்.
கணக்கீட்டு ஆய்வில் உட்படுத்தப்பட்டவர்களில் 62.2% பேர் ஒரு டோஸ் தடுப்பூசி கூட இன்னும் பெறாதவர்கள். 24.8% பேர் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றவர்கள்; 13% மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். எனவே கட்டாயம் நமது தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரித்தாக வேண்டும்.
மேலும் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி என்பது மாநிலங்களுக்கு மாநிலம் மாவட்டத்தில் இருந்து மாவட்டம் வேறுபாட்டுடன் காணப்படுகிறது. எனவே அனைத்து இடங்களிலும் மூன்றாம் அலை ஒரே மாதிரியான தாக்கத்துடன் வெளிப்பட வாய்ப்பில்லை. எங்கெல்லாம் கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியும் தடுப்பூசி செலுத்திக்கொண்டோர் விகிதமும் குறைவாக இருக்கிறதோ அங்கெல்லாம் மூன்றாம் அலையின் தீவிரம் சற்று அதிகமாகவே இருக்கும்.