செல்போன், சிஸ்டம்ல இருந்து கண்களை காப்பாத்துங்க!

செல்போன், சிஸ்டம்ல இருந்து கண்களை காப்பாத்துங்க!
செல்போன், சிஸ்டம்ல இருந்து கண்களை காப்பாத்துங்க!

மனிதர்களின் கண்கள் லட்சக்கணக்கான ஆண்டுகளாக ஒளியைப் பார்த்துப் பார்த்து அதற்கேற்ப பரிணாம மாற்றம் அடைந்துள்ளது. எனவே நாம் பார்க்கும் ஒளிகளுக்கு ஏற்ப கண்கள் விரிந்தோ அல்லது சுருங்கியோ சில விநாடிகளில் இயல்பு நிலையை அடையும். எடுத்துக்காட்டாக கூற வேண்டும் என்றால் தூக்கத்தில் இருக்கும் போது திடீரென கண்விழித்தாள் மின்விளக்குகளை காணமுடியாமல் கண்களை மூடும் நிலை ஏற்படும். 

சற்று நேரத்தில் அது சரியாகிவிடும். சில நேரங்களில் திரையரங்கத்திற்கு உள்ள நுழைந்தவுடன் உங்களால் எதையும் காண முடியாது. கரும் இருட்டாக இருக்கும். கொஞ்ச நேரத்தில் வெளிச்சத்திற்கு ஏற்ற நிலையை கண்கள் அடைந்து, காட்சிகள் தெரியும். இவ்வாறு நம் கண்கள் நாள்தோறும் பல்வேறு ஒளிகளுக்கு இடையே வாழ்ந்து வருகிறது.

தற்போதைய காலகட்டத்தில் டிவி, செல்போன், கம்யூட்டர், லேப்டாப் இல்லாமல் மக்களால் இருக்கவே முடியாது என்ற நிலை உள்ளது. டிவி முன்னர் அமர்ந்தால் அனைத்தையும் மறந்து விடும் குடும்பப் பெண்களும், செல்போனை பயன்படுத்தத் தொடங்கினால் சாப்பிடக்கூட மறந்து விடும் இளைஞர்களும், காலநேரம் பார்க்காமல் கணினி முன்பு அமர்ந்து பணிபுரியும் ஆண்களும் நிறையவே இருக்கின்றனர். 

சராசரியாக நமது இமைகள் ஒரு நிமிடத்துக்கு 15-20 முறை சிமிட்டும் தன்மை கொண்டவை. அவ்வாறு சிமிட்டுவதால் கண்ணில் ஈரப்பதம் சீராக இருக்கும். ஆனால் கணினிகளை நீண்ட நேரம் பார்க்கும் போது இமைகளைச் சிமிட்டுவது வெகுவாக குறைகிறது. இதனால் கண்ணின் ஈரப்பதம் குறைந்து பாதிப்புகள் ஏற்படுகிறது. இதேபோன்று டிவியையும், செல்களையும் கண் இமைக்காமல் பார்க்கிறோம் அதிலும் இதே பிரச்னை தான். சிலர் டிவியை அருகில் அமர்ந்து பார்க்கும் பழக்கம் கொண்டிருப்பர். அவர்களுக்கு பாதிப்பு சற்று அதிகம் ஏற்படும்.

இவ்வாறு கண்ணின் ஈரப்பதம் குறைவதால், கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு பார்வைக் குறைபாடு, கண்கள் அரிப்பு, நீர்வடிதல், எரிச்சல், கண்களில் சிறு கட்டிகள் போன்றவை ஏற்படுகின்றன. சிலர் இரவு விளக்குகளை அணைத்து விட்டு கணினி, செல்போன், டிவியை பார்க்கும் பழக்கம் கொண்டிருப்பர். இதனால் பசியின்மை, தூக்கமின்மை, அஜீரணம் போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன. 

எனவே கணினி, டிவி, செல்போன்களை பார்க்கும் போது போதுமான வெளிச்சம் தேவை. டிவி மற்றும் கணினியில் பிம்பங்கள் எதிரொளிப்பதை தவிர்க்கலாம். உதாரணத்திற்கு டிவியின் திரையில் கதவு, ஜன்னல், மின்சார விளக்கு எதிரொளித்தால் அது வெளிச்சத்தின் தன்மை அதிகரிக்கும். இதன்மூலம் கண் பாதிப்பு ஏற்படும். கண்ணாடி அணிந்திருப்பவர்களுக்கு பாதிப்பு சற்று அதிகம். 

பயன்படுத்தும் கணினிகளில் பழைய டிவி மாடல் மானிட்டர்களை மாற்றி எல்.சி.டி/ எல்.இ.டி மானிட்டர்களைப் பயன்படுத்துவது சிறந்தது. அத்துடன் மானிட்டரில் வெளிச்சத்தின் அளவை மிகையும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் வைத்துகொள்ள வேண்டும். நீண்ட நேரம் தொடர்ந்து கணினியை பார்க்கமால் 5 நிமிடங்களுக்கு ஒருமுறை வேறு ஏதேனும் ஒரு இடத்தை மாற்றி பார்த்து, சில விநாடிகள் சென்ற பின் மீண்டும் பணியை தொடங்கலாம்.

தினமும் கண்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். கண்களை மூடி அதன் மீது வெள்ளரிக்காய் போன்ற குளிர்ச்சியான காய்கறியை வைக்கலாம். கண்கள் மூடி யோகா அல்லது தியானம் செய்யலாம். கண்களுக்கு குளிர்ச்சி தரும் கீரைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். பின்னரவில் டிவி, செல்போன், கணினி பார்த்தப்பதை குறைக்கலாம் அல்லது தவிர்க்கலாம். அவ்வப்போது கண்களை பரிசோதித்து அதற்கேற்ப உணவு முறைகளை சீர் செய்யலாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com