டி20 உலகக் கோப்பை : பனி பொழிவினால் திசை மாறுகிறதா அணிகளின் வெற்றி வாய்ப்பு? - ஓர் அலசல்

டி20 உலகக் கோப்பை : பனி பொழிவினால் திசை மாறுகிறதா அணிகளின் வெற்றி வாய்ப்பு? - ஓர் அலசல்
டி20 உலகக் கோப்பை : பனி பொழிவினால் திசை மாறுகிறதா அணிகளின் வெற்றி வாய்ப்பு? - ஓர் அலசல்

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துகிறது. இருப்பினும் கொரோனா தொற்று பரவல் அச்சுறுத்தலால் இந்தியாவில் நடைபெறவிருந்த இந்தப் போட்டிகள் மாற்றப்பட்டு தற்போது அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இடங்கள் மாறி இருந்தாலும் ஆட்டத்தின் முடிவுகளை பொறுத்த வரையில் காட்சிகள் ஏதும் மாறவில்லை. இதற்கு முதல் காரணமாக சொல்லப்பட்டு வருவது பனிப்பொழிவு (Dew).

சூப்பர் 12 சுற்றுப் போட்டிகளில் இதுவரையில் 11 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 9 போட்டிகளில் டாஸ் வென்ற அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதில் 10 முறை இரண்டாவதாக பேட் செய்த அணி தான் ஆட்டத்தை வென்றுள்ளது. 

நடப்பு டி20 உலகக் கோப்பையை பொறுத்தவரையில் டாஸ் வெல்லும் அணிகள் முதலில் பந்துவீச விரும்புகின்றன. ஏனெனில் இரண்டாவது பாதி இன்னிங்ஸில் பனிப்பொழிவின் தாக்கம் இருந்தால் அது பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்காது. அதனை பயன்படுத்தி பேட்ஸ்மேன்கள் எளிதில் ரன் குவிக்கலாம் என்பது அணிகளின் கணிப்பாக உள்ளது. 

Dew Factor?

கிரிக்கெட் போட்டி நடைபெறும் நேரத்தில் பனிப்பொழிவு இருந்தால் மைதானத்தில் இருக்கும் புற்களில் ஈரம் படர்ந்திருக்கும். அதனால் பந்து ஈரமாகும். அந்த ஈரத்தினால் பவுலர்கள் பந்தை கெட்டியாக பிடித்து பந்து வீசுவதும், பந்தை பீல்டர்கள் தடுப்பதும் மற்றும் கேட்ச் பிடிப்பதும் சவாலாக இருக்கும். குறிப்பாக பந்து பவுலர்களின் கையில் இருந்து நழுவி செல்லும். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்த பனிப்பொழிவு மேலும் சிக்கலை கொடுக்கும். அதனால் பந்தை டேர்ன் (Turn) செய்யவும் முடியாது. பந்து சுழலாமல் மெல்லாமக வருவது பேட்ஸ்மேன்களுக்கு மேலும் சாதகமாக இருக்கும். அதை பயன்படுத்தி பேட்ஸ்மேன்களால் பவுலர்களை அவர்களால் அப்செட் செய்ய முடியும்.

இந்த தொடர் இந்தியாவில் நடந்திருந்தாலும் இந்த பனிப்பொழிவின் தாக்கம் ஆட்டத்தில் இருந்திருக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் துல்லியமாக யார்கர் வீசுவதும் சவாலாக இருக்கும். எதிர்வரும் நாட்களில் இந்த பனிப்பொழிவு மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது பகல் நேரங்களில் சராசரியாக 33 டிகிரி செல்சியஸ் என இருக்கும் வெப்பம் இரவு நேரங்களில் 25 டிகிரிக்கும் கீழ் சரிந்து வருவதாக வானிலை அறிக்கைகள் சொல்கின்றன. நவம்பரின் முதல் இரண்டு வாரங்களில் இரவு நேர வெப்பநிலை மேலும் குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. இதை வைத்து பார்த்தால் பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கலாம்.  

இந்தியா இதை எப்படி சமாளிக்க போகிறது?

பனிப்பொழிவை சமாளிக்கும் நோக்கில் இந்திய அணி தற்போது சிறப்பு பயிற்சி எடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக பனிப்பொழிவை பந்தை ஈரம் படரும் வகையில் செய்து பவுலிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியை இந்திய வீரர்கள் மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஏனெனில் டாஸ் முடிவு என்பது நம் கைகளில் இல்லை. ஆனால் பனிப்பொழிவை சமாளிக்க பயிற்சியும், முயற்சியும் இருந்தாலும் போதும் என்பதை இந்தியா அறிந்து வைத்துள்ளது. இப்போது வீரர்கள் எதிரணி மட்டுமல்லாது பனிப்பொழிவையும் சமாளித்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். 

இருந்தாலும் பகல் நேரங்களில் (3.30 மணி போட்டி) நடைபெறுகின்ற ஆட்டங்களிலும் இரண்டாவதாக பேட் செய்யும் அணி தான் வெற்றி பெற்றுள்ளது. இதற்கு காரணம் அமீரக ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஃப்ளாட்டாக (Flat) இல்லை என சொல்லப்படுகிறது. பவர் ஹிட்டர்கள் அடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியை முதலில் பேட் செய்ய சொல்லி தென் ஆப்பிரிக்க அணி 143 ரன்களில் அவர்களை கட்டுப்படுத்தி உள்ளது கவனிக்கத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com