இந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் ? இதனை கவனிக்க !

இந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் ? இதனை கவனிக்க !
இந்தாண்டு சபரிமலைக்கு செல்ல திட்டமிடும் பக்தர்களா நீங்கள் ? இதனை கவனிக்க !

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்தாண்டு மண்டல பூஜையின்போது சுவாமி தரிசனம் செய்வதற்கான இணைய வழி முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. எனவே, இந்தாண்டு நவம்பர் 17 ஆம் தேதி முதல் அடுத்தாண்டு ஜனவரி 19 ஆம் தேதி வரை சுவாமி தரிசனம் செய்ய விரும்புவோர் www.sabarimalaq.com என்ற இணையதளத்துக்குச் சென்று சுவாமி தரிசனத்துக்கான முன்பதிவை செய்துகொள்ளலாம். 

சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் நிகழாண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 16 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நவம்பர் 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு டிசம்பர் 27 ஆம் தேதி மூடப்படும். அதைத் தொடர்ந்து மகர விளக்கு பூஜைக்காக மீண்டும் திறக்கப்படும். பின்பு டிசம்பர் 31 ஆம் தேதி மாலை திறக்கப்பட்டு ஜனவரி 19 ஆம் தேதி வரை மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும். சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு பூஜை மாதங்களில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம் உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சபரிமலையில் குவியத் தொடங்குவார்கள். 

சில சமயங்களில் பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருக்கும். இதனால் பெரும்பாலான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையும் ஏற்படுகிறது.  இதைத் தவிர்ப்பதற்காக கேரள காவல்துறை சார்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தரிசனத்துக்காக இலவசமாக இணையதளத்தில் முன்பதிவு செய்யும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. 2017 ஆம் ஆண்டு மட்டும் மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் இணையதள வசதியை பயன்படுத்தி 22 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் கவனிக்க !

பக்தர்கள் இணையதள தரிசன முன்பதிவு செய்தவர்கள் கூப்பனில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்துக்கு சரியாகவோ அல்லது 15 நிமிஷம் முன்போ, பின்போ சென்றால் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். 1 மணி நேரத்துக்கும் முன்பாகவோ அல்லது பின்பாகவோ சென்றால் பொது தரிசனத்தில்தான் செல்ல வேண்டும். இந்தாண்டு மண்டல பூஜைக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு வரவேண்டாம் என்ற கேரள மாநிலக் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. சபரிமலை கோயில் அடர்வனப் பகுதியாகும், மேலும் பெரியார் புலிகள் சரணாலயத்தின் ஒரு பகுதியாக இருப்பதால், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக்கை தவிர்க்க பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

பம்பையில் அசுத்தம் வேண்டாம் !
மேலும், "பம்பை புனித ஆற்றில் பாவங்களை தொலைக்கும் நோக்கில் துணிகளை விட வேண்டாம், அது பம்பை ஆற்றின் தூய்மைக்கு கேடு தரும். இதுபோன்ற மூட பழக்க வழக்கங்களை விட்டுவிட்டு நதியின் புனிதத்தை காக்க பக்தர்கள் முன்வர வேண்டும்' என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் வாகனங்களுக்கு அனுமதியில்லை ! 

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வேன், பேருந்துகளில் வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை பம்பையில் இருந்து 18 கி.மீ, தொலைவில் இருக்கும் நிலக்கல்லில் நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கார்களில் வருபவர்கள் மட்டுமே பம்பை, அதைச் சுற்றியுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படுவர். அதுவும் இம்முறை அனுமதியில்லை. வேன், பேருந்துகளில் வரும் பக்தர்களை ஓட்டுநர்கள் பம்பையில் இறக்கிவிட்ட பிறகு நிலக்கல் சென்று வாகனங்களை நிறுத்த வேண்டும். சாமி தரிசனம் முடித்துவிட்டு வரும் பக்தர்கள் பம்பையில் இருந்து அரசுப் பேருந்து மூலம் நிலக்கல் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், இம்முறை அனைத்து வாகனங்களும் நிலக்கல்லில் நிறுத்தப்பட வேண்டும். அங்கிருந்து அரசுப் பேருந்தில் பம்பை செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்வது எப்படி ?

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் www.sabarimalaq.com என்ற இணையதளத்துக்கு செல்ல வேண்டும். இந்த இணையதளத்தில் பக்தர்கள் தங்கள் பெயர், முகவரியோடு, புகைப்படத்தையும் "விர்ச்சுவல் கியூ' கூப்பன் திட்டத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்பு, நீங்கள் செல்ல விரும்பும் தேதி, எந்த நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யப் போகிறீர்கள் என்பதையும் பதிவு செய்ய வேண்டும். சுவாமி தரிசனம் செய்ய விரும்புவோர் காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை எந்த நேரம் தங்களுக்கு ஏற்றதோ அந்த நேரத்தில் முன்பதிவு செய்து ஐயப்பனை தரிசிக்கலாம்.

முன்பதிவு செய்த பக்தர்கள் தங்களுடன் ஏதாவது ஓர் அசல் அடையாள அட்டை, பதிவிறக்கம் செய்யப்பட்ட கூப்பன் ஆகியவற்றுடன் பம்பை செல்ல வேண்டும். அங்கு இதற்கான சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டிருக்கும்.பக்தர்கள் கொண்டு செல்லும் கூப்பன், அடையாள அட்டையைப் பரிசோதித்த பிறகு பம்பையில் இருந்து மலை ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்படும். கூப்பனில் பதிவு செய்யப்பட்ட நேரத்துக்கு 30 நிமிஷங்களுக்கு முன்பாகச் சென்றால் அதிகபட்சமாக ஒரு மணி நேரத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் பதினெட்டாம் படியில் ஏறி சுவாமி தரிசனம் செய்து விடலாம்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com