ஏன் இப்படி செய்தீர்கள் ஸ்மித்? கண்கலங்கும் ரசிகர்கள்

ஏன் இப்படி செய்தீர்கள் ஸ்மித்? கண்கலங்கும் ரசிகர்கள்
ஏன் இப்படி செய்தீர்கள் ஸ்மித்? கண்கலங்கும் ரசிகர்கள்

ஸ்மித் செய்தியாளர்கள் சந்திப்பில் தேம்பி, தேம்பி அழுதக் காட்சி பார்ப்பவர்களையும் கண் கலங்க வைத்திருக்கும். தன்னுடைய குற்றத்தை நூறு சதவீதம் உணர்ந்து அவர் பேசியிருக்கிறார். அவரால் தன்னை கட்டுப்படுத்தவே முடியவில்லை. தான் அடைந்த அவமானத்தை முகத்தின் மூலம் வெளிப்படுத்தினார். ஆஸ்திரேலியா அணிக்கு மட்டுமல்ல தன்னுடைய பெற்றோருக்கும் களங்கம் விளைவித்துவிட்டதாக ஸ்மித் பேசினார். 

கிரிக்கெட் உலகின் முடிசூடா அணியாக ஆஸ்திரேலியா திகழ்ந்து வருகிறது. ஒரு காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வசம் இருந்த அந்தப் பெயரை தற்போது ஆஸ்திரேலியா அணி தன் வசம் வைத்துள்ளது. ஆஸ்திரேலிய அணியை உச்சத்துக்கு கொண்டு சென்றவர் ரிக்கி பாண்டிங். அந்த உச்சத்தை சரியவிடாமல் பாதுகாக்க இன்றும் போராடி கொண்டிருப்பவர் ஸ்மித். ஆஸ்திரேலிய அணியின் சமீபத்திய சாதனைகளுக்கு ஸ்மித் தான் முக்கிய காரணமாக திகழ்கிறார். 

உலக அளவில் தற்போது 4 வீரர்கள் தான் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார்கள். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, நியூசிலாந்து அணியின் வில்லியம்சன், இங்கிலாந்து அணியின் ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் தனது பேட்டிங் திறமையால் ரசிகர்களை கட்டிப் போட்டுள்ளார்கள். இதில், அதிகமான விராட் கோலிக்கும், ஸ்மித்திற்கும் இடையே ஒப்பீடு இருக்கும். ஒரு நாள் போட்டியில் விராட் கோலி என்றால், டெஸ்ட் போட்டிகளில் ஸ்மித்தான் தற்போது வரை கிங்காக இருக்கிறார். தனியொரு ஆளாக இருந்து ஆஸ்திரேலியா அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றவர். தொடர்ச்சியாக சதங்களை விளாசினார். ஆனால், அடுத்த ஒரு வருடத்தில் கிரிக்கெட் ஆடுகளங்களில் ஸ்மித்தை பார்க்க முடியாது.

ஆஸ்திரேலியா அணி இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவது இது முதல் முறையல்ல. வெற்றி பெறுவதற்காக அவர்கள் பல்வேறு வழிமுறைகளை கையாள்வார்கள். குறிப்பாக எதிரணியை தூண்டிவிட்டு உணர்ச்சி வசப்பட வைப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் சர்ச்சை ஆகி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியில் பல்வேறு வீரர்கள் அந்தச் சர்ச்சைக்கு ஆளாகி இருக்கிறார்கள். ஷேன் வார்னே, ஸ்டீவ் வாக், கில்கிரிஸ்ட் உள்ளிட்ட சாந்தமான வீரர்கள் அந்த அணியில் இருந்தார்கள். 

ஆனால், ஸ்மித் அப்படிபட்டவர் அல்ல. ஒருவகையில் தோனியை ஒத்தவர்தான் அவரும். எல்லா நேரங்களிலும் அவர் உணர்ச்சிவசப்பட மாட்டார். குறிப்பிட்ட சில தருணங்களில் தான் தன்னுடைய உணர்ச்சியை ஆக்ரோஷமாக வெளிப்படுத்துவார். பெரும்பாலும் அமைதியாகவே இருப்பார். அமைதியாகவே இருப்பார், ஆனால் ரன்களை மட்டும் குவித்துக் கொண்டே இருப்பார். தன்னுடைய பேட்டிங்கில் புது யுக்தியையும் அதற்காக அவர் கடைபிடிப்பார். ஆடுகளத்தில் ஆட்டமிழக்காமல் ஸ்டம்பிற்கு நேராக வராத பந்துகளை அவர் அடிப்பதே இல்லை. இதனால் அவரை ஆட்டமிழக்க செய்வது பெரும் சவாலாக இருக்கும். சீராக வேகத்தில் ரன்களை சேர்க்கக் கூடியது. நீண்ட நேரம் ஆடுகளத்தில் நிற்கக் கூடியவர். 

நல்ல பண்புகளை வெளிப்படுத்தி வந்த ஸ்மித் தன்னுடைய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கரும்புள்ளிக்கு அவரே இடமளித்துவிட்டார். அடுத்த ஓராண்டுக்கு கிரிக்கெட் வாழ்க்கையை விட்டு அவர் எப்படிதான் தனித்து இருக்க போகிறாரோ?. ஓராண்டுக்கு பிறகு எப்படி மீண்டு வரப்போகிறாரோ?. ஸ்மித் எப்படி மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறாரோ அப்படிதான் அவரது ரசிகர்களும். ஓராண்டு தடை என்ற செய்தி கேட்டு நிச்சயம் அவர்கள் நொறுங்கி போயிருப்பார்கள். ஸ்மித் செல்லும் இடங்களில் அவரது ரசிகர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். ஸ்மித் அழுததை பார்த்து நிச்சயம் பல ரசிகர்கள் கண்கலங்கி இருப்பார்கள்.

எல்லாவற்றையும் ஜீரணித்து ஸ்மித் மீண்டு வர வேண்டும் என்பதுதான் அவரது ரசிகர்களின் ஆசை..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com