
நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ பத்தாவது மற்றும் 12-ஆவது வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன.
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 8 லட்சத்து 86 ஆயிரத்து 506 மாணவர்கள் எழுதுகின்றனர். இதற்காக 16 ஆயிரத்து 363 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 12-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 10 லட்சத்து 98 ஆயிரத்து 981 மாணவர்கள் எழுதுகின்றனர். அவர்களுக்காக 10 ஆயிரத்து 678 மையங்கள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வெழுதும் மாணவர்கள் தங்களுடைய தேர்வு மையங்களை கண்டறிய மொபைல் ஆப் வசதியையும் சி.பி.எஸ்.இ வெளியிட்டுள்ளது. மேலும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தேர்வுக்கிடையில் சிற்றுண்டிகள் உண்ண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் சி.பி.எஸ்.இ தேர்வுகள் நடைபெறுகின்றன.