தேனி அருகே கல்லூரி மாணவர்கள் விடுதி பின்புறம் உடலில் 4 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார்.காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேனி மாவட்டம் கீழகூடலூரில் வசித்து வந்தவர்கள் கண்ணன்-முருகேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். முருகேஸ்வரியின் கணவர் கண்ணன் இறந்த பிறகு 2 குழந்தைகளுடன் முருகேஸ்வரி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் போடி மேலச்சொக்கநாதபுரம் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் விடுதி பின்புறம் உள்ள ராஜா என்பவரது தோட்டத்தில் இறந்த நிலையில் பெண் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவல் அடிப்படையில் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்ற போடி தாலூகா காவல்துறையினரின் விசாரணையில் இவர் கீழகூடலூரை சேர்ந்த முருகேஸ்வரி என்பதும் உடலில் 4 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.
முருகேஸ்வரியின் உடலை மீட்டெடுத்து காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக க.விலக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் இளம்பெண் கொலை செய்யப்பட்ட இடத்தை நேரில் ஆய்வு செய்தார். பின்பு மோப்பநாய் லக்கி வரவழைக்கப்பட்டு கொலையாளியை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.