சென்னை | அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட விவகாரம்.. வடமாநில இளைஞர் கைது.. நடந்தது என்ன?
செய்தியாளர்: R. கிறிஸ்துராஜன்
கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகமை சேர்ந்தவர் கணேசன் மூர்த்தி (47). இலங்கைத் தமிழர் ஆன இவர் கடந்த 11 வருடங்களுக்கு முன்பு சரஸ்வதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் வெளியூர்களுக்கு சரக்குகளை கொண்டு செல்லும் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும் 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த இரண்டு மகன்களும் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் இருந்து வருவதாக தெரிய வருகிறது.
இந்நிலையில் சரஸ்வதி கடந்த ஒன்றறை மாதங்களுக்கு முன்புதான் கொளத்தூரில் உள்ள ஒரு வாடகை வீட்டிற்கு தனியாக குடித்தனம் சென்றுள்ளார். இந்நிலையில் இரண்டு நாட்களாக லாரி டிரைவர் கணவர் கணேச மூர்த்தி தொலைபேசியில் சரஸ்வதியை தொடர்பு கொண்டார். ஆனால் அப்பொழுது அவர் போனை எடுக்காததால் அருகில் இருந்த தனது நண்பரை அழைத்து வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறினார். உடனே வீட்டிற்கு சென்ற நண்பர், சரஸ்வதியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக கணவருக்கு தகவல் தெரிவித்தார். இந்நிலையில், கணேசமூர்த்தி வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடு பூட்டி இருந்தது.
உடனே அக்கம்பக்கத்தினர் கொளத்தூர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த பொழுது அழகிய நிலையில் சரஸ்வதி பிணமாக கிடந்துள்ளார். உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து கொளத்தூர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்..
விசாரணையில், உயிரிழந்த சரஸ்வதிக்கு குடிப்பழக்கம் மற்றும் கஞ்சா போதை உள்ளிட்ட அனைத்து பழக்கங்களும் உள்ளதாக தெரிய வந்தது.
இந்நிலையில் கொலை நடந்த இடத்தில் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் வட மாநில இளைஞர் ஒருவர் கொலை நடந்த வீட்டில் இருந்து வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது. இதனை அடுத்து கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை வைத்து காவல்துறையினர் வட மாநிலம் விரைந்து சென்று அங்கு பதுங்கி இருந்த மொய்தீன் என்பவரை கைது செய்துதனர். மேலும் கொளத்தூர் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.