திருப்பத்தூர் | தந்தையை கொலை செய்த மாமனை வெட்டிக் கொலை செய்த மகன் - ஐந்து பேர் கைது
செய்தியாளர்: சுரேஷ்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திம்மராயன். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த இவருக்கும், இவரது அக்கா மகன் சக்கரவர்த்தி என்பவருக்கும் இடையே நிலப் பிரச்னை இருந்து வந்ததுள்ளது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் சக்கரவர்த்தி, திம்மராயனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சக்கரவர்த்தி சில தினங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்
இதனை தொடர்ந்து நேற்று காஞ்சிபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்து போட பொன்னேரி பகுதியில் சக்கரவர்த்தியும் மனைவி கௌரியும் பேருந்துக்காக காத்திருந்துள்ளனர். அப்போது திடீரென காரில் வந்த ஐந்து நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் சக்கரவர்த்தியை சரமாரியாக வெட்டிவிட்டு தடுக்க வந்த கௌரியையும் தாக்கி விட்டு தப்பியோடினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு சக்கரவர்த்திற்கு முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக சக்கரவர்த்தியை வேலூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே சக்கரவர்த்தி உயிரிழந்தார். மேலும் சக்கரவர்த்தியை வெட்டிக் கொலை செய்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் இந்த வழக்கில் முதற்கட்டமாக திம்மராயன் மகன் பாரத் (24) மற்றும் அவருடைய நண்பர்களான வெங்கடேசன் (24) வசந்தகுமார் (23) அக்பர் பாஷா (21) திப்புசுல்தான் (20) ஆகியோரை கைது செய்தனர்.
தந்தையை கொன்றதால் மகன் பழிக்குப் பழி வாங்கியது விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ஐந்து பேரையும் ஜோலார்பேட்டை போலீசார் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.