காதல் விவகாரத்தில் மாணவி குத்திக்கொலை.. இளைஞரும் தற்கொலை..!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே காதல் விவகாரத்தில் ஆசிரியர் பயிற்சி மாணவியை குத்தி கொலை செய்த சட்டக்கல்லூரி மாணவர் தானும் தற்கொலை செய்துகொண்டார்.
சாத்தூர் அருகேயுள்ள ரெட்டியாபட்டியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவர் மதன். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பெண்ணை வேறு ஒருவருக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த மதன் அப்பெண்ணுடன் சண்டை போட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், மகாலட்சுமி வீட்டின் அருகேயுள்ள குடிநீர் குழாய்க்கு தண்ணீர் பிடிக்க வந்தபோது, அங்கு வந்த மதன் தகராறு செய்துள்ளார். ஆத்திரம் அடைந்த மதன், மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணைக் குத்தி கொலை செய்தார்.
இதனையறிந்து அங்கு விரைந்த காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். மதனின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்த காவல்துறையினர் அங்கு சென்றனர். அப்போது மதனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மதனின் உடலை மீட்டு இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, இருவரது பெற்றோரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.