’நான் இவருடன் செல்கிறேன்’ கைகாட்டிய கிருத்திகா.. முடிவுக்கு வந்தது வழக்கு! வினித் நிலை?

’நான் இவருடன் செல்கிறேன்’ கைகாட்டிய கிருத்திகா.. முடிவுக்கு வந்தது வழக்கு! வினித் நிலை?
’நான் இவருடன் செல்கிறேன்’ கைகாட்டிய கிருத்திகா.. முடிவுக்கு வந்தது வழக்கு! வினித் நிலை?

கிருத்திகா பட்டேலை, அவரது விருப்பத்தின்படி கேரளாவில் உள்ள உறவினர் ஹரிஸ் பொறுப்பில் அனுப்பி வைக்க மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கிருத்திகா பட்டேல் மேஜர் என்பதால் யாருடன் செல்ல வேண்டும் என்பது அவருடைய விருப்பம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தைச் சேர்ந்த மாரியப்பன் வினித் என்பவர் சமீபத்தில் உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில்,"இலஞ்சி தென்றல் நகரைச் சோ்ந்த நவீன் பட்டேலின் மகள் கிருத்திகா பட்டேல். நானும் கிருத்திகா பட்டேலும் கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த டிசம்பர் 27 அன்று நாகா்கோவிலில் திருமணம் செய்துகொண்டோம். இதற்கிடையே தன்னுடைய மகளைக் காணவில்லை எனக் கூறி நவீன்பட்டேல் குற்றாலம் காவல்நிலையத்தில் புகாா் செய்தார். அதனடிப்படையில் நானும், கிருத்திகாவும் காவல்நிலையத்தில் ஆஜராகினோம். விசாரணையின் முடிவில் கிருத்திகா பட்டேல், என்னுடன் செல்வதாகக் கூறியதையடுத்து என்னுடன் அழைத்து சென்றேன்.

இந்நிலையில், கடந்த ஜனவரி 25ம் தேதி எனது குடும்பத்தினருடன் காவல் நிலையம் சென்றுவிட்டு, மீண்டும் காரில் கொட்டாகுளத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது, நவீன்பட்டேல், அவருடைய மனைவி தா்மிஸ்தா பட்டேல் உள்ளிட்டோா் என்னை தாக்கி எனது மனைவி கிருத்திகா பட்டேலை கடத்தி சென்றனர்.

நான் இது குறித்து குற்றாலம் காவல்நிலையத்தில் புகாா் செய்தேன். புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால், கிருத்திகா பட்டேல்லை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கிருத்திகா பட்டேல் மீட்டு ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்" என  கூறியிருந்தார்.

இந்த வழக்கின் முந்தைய விசாரணையில், அரசு தரப்பில், “வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. சம்பந்தப்பட்ட கிருத்திகா பட்டேலை தாத்தாவுடன் அனுப்பினால் விசாரணை பாதிக்கும். கிருத்திகா பட்டேலின் குடும்பத்தினர் தலைமறைவாக உள்ளனர். அதனால் கிருத்திகா பட்டேலை தாத்தாவுடன் அனுப்பக்கூடாது” என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து கிருத்திகா பட்டேலை தாத்தாவுடன் அனுப்ப நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது கிருத்திகாவை மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டிருந்தனர். அதனடிப்படையில் நீதிபதிகள் முன்பாக கிருத்திகா பட்டேல் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது நீதிபதிகள், “கிருத்திகா பட்டேல் மேஜர் என்பதால் யாருடன் செல்ல வேண்டும் என்பது அவருடைய விருப்பம். கிருத்திகா பட்டேல் யாருடன் செல்ல உள்ளார் என்பதை எழுத்து மூலமாக தரவும். கிருத்திகா பட்டேல் வழக்கில் பல தரப்பில் அதிகாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. கிருத்திகா பட்டேல் யாருடன் செல்கிறாறோ அவர்தான் பெண்ணின் பாதுகாப்பிற்கு பொறுப்பு. கிருத்திகா பட்டேல் விசாரணைக்கு முறையாக ஆஜர்படுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றனர். அதைத்தொடர்ந்து கிருத்திகா பட்டேல், கேரளாவில் உள்ள உறவினர் ஹரிஸ் உடன் செல்வதாக கடிதத்தின் மூலம் நீதிபதிகளிடம் தெரிவித்தார்.

அதன்படி கிருத்திகா பட்டேல் கேரளாவில் உள்ள உறவினர் ஹரிஸ் பொறுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார். மாரியப்பன் வினித் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என கூறி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்துனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com