”காவல்துறை என்று ஒன்று உள்ளதா?” | கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை.. இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்!
கோயம்புத்தூரில் சட்டக் கல்லூரி மாணவி மூன்று இளைஞர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு திர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
கோயம்புத்தூர் சித்ரா சர்வதேச விமான நிலையம் அருகே, நேற்று இரவு 11 மணி அளவில் தன்னுடைய நண்பருடன் மாணவி ஒருவர் காரில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த மூன்று பேர் மாணவியின் நண்பரை தாக்கி விட்டு அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். படுகாயம் அடைந்த அந்த நண்பர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து, அங்கு உடனடியாக சென்ற காவல் துறையினர் மாணவியை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், படுகாயம் அடைந்த அந்த இளைஞரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிய மூன்று பேரின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பீளமேடு காவல் துறையினர் தனி படை அமைத்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் கோயம்புத்தூரைத் தாண்டி தமிழக அளவில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அண்ணாமலை விமர்சனம் !
இந்நிலையில், சட்டக்கல்லூரி மாணவி, 3 சமூக விரோதிகளால் கூட்டுப்பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது; திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கு உள்ளது என பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.
இது குறித்து பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை சர்வதேச விமான நிலையம் அருகில், நேற்று இரவு, நண்பருடன் பேசிக்கொண்டிருந்த மாணவி, 3 சமூக விரோதிகளால் கூட்டுப்பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட செய்தி, மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி விரைந்து நலம் பெற வேண்டிக்கொள்கிறேன். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதோ, காவல்துறையின் மீதோ சிறிதும் பயமில்லை என்பதையே, பெண்களுக்கெதிரான இது போன்ற தொடர் குற்றச் செயல்கள் காட்டுகின்றன. திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறையினர் வரை, பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கையே மேற்கொள்கின்றனர்.
பாலியல் குற்றங்களைத் தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ, திமுக ஆட்சி தவறிவிட்டது. பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவோ, சட்டம் ஒழுங்கைக் காக்கவோ, காவல்துறையினரைப் பயன்படுத்தாமல், திமுக அரசை விமர்சிப்பவர்களைக் கைது செய்ய மட்டுமே பயன்படுத்துவதால், தமிழகம் இன்று இழிநிலையில் இருக்கிறது. இப்படி ஒரு கையாலாகாத நிலையில் காவல்துறையை வைத்திருக்கும் காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சர் வெட்கித் தலைகுனிய வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
”தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா?” - எதிர்க்கட்சித் தலைவர் கே. பழனிசாமி
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 2.11.2025 அன்று இரவில், கோவை விமான நிலையத்தின் பின்புறம் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த கல்லூரி மாணவியை, மூன்று இளைஞர்கள் தாக்கி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நிலையில், வன்கொடுமைக்குப் பிறகு பாதிப்புக்குள்ளான மாணவியை தனியார் கல்லூரி பின்புறம் தூக்கி எறிந்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்றும், பாதிப்புக்குள்ளான அம்மாணவி, 3.11.2025 அன்று அதிகாலையில் காவல்துறையினரால் மீட்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக வரும் செய்திகள் தமிழகத்தில் காவல்துறை என்று ஒன்று உள்ளதா? என்ற கேள்வியை அனைவரிடமும் எழுப்பியுள்ளது.
பெண்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்துவிட்ட ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். அதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத் தகுந்த மாநிலங்களில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. குறிப்பாக, எனது தலைமையிலான ஆட்சியில், இந்தியாவிலேயே பெண்கள் பாதுகாப்பாக வாழத்தகுந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடமும், பெரு நகரங்களில் சென்னை முதலிடமும், நகரங்களில் கோயம்புத்தூரும் தொடர்ந்து இடம் பெற்று வந்தன. அம்மா அரசின் ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டது.
திமுக அரசு பெண்களை பாதுகாக்கும் என்று நம்ப வேண்டாம் என்று சில மாதங்களுக்கு முன்பு அதிமுக சார்பில் கண்களில் Pepper Spray அடிக்கும் கருவி, டார்ச், உள்ளிட்ட பாதுகாப்பு பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை பெண்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை நான் சென்னையில் தலைமைக் கழகத்தில் துவக்கி வைத்தேன். தொடர்ந்து கழக நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் வழங்கினர். மேலும், திமுக ஆட்சியில் பெண்கள் தங்களுக்கு தாங்களே பாதுகாப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும். கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை உடனடியாக கண்டுபிடித்து, சட்டத்தின் பிடியில் நிறுத்தி,கடும் தண்டனை வாங்கித்தர வேண்டும் என காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கூட்டுப்பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

