TTF VASAN ARREST | சிகிச்சை என சொல்லிவிட்டு பதுங்கியிருந்த TTF வாசன்... பிணையில் வரமுடியாதபடி கைது!
இரண்டு நாட்களுக்கு முன்பாக சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் வீலிங் செய்தபோது நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானார் யூட்யூபர் TTF வாசன்.
இதையடுத்து காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் முதலுதவிக்காக அழைத்து செல்லப்பட்டார் அவர். இந்நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் அவர்மீது காஞ்சிபுரம் பாலுசெட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் தமிழக போக்குவரத்து ஆணையரகம் பரிந்துறை செய்திருந்தது. இதற்கிடையே மேல் சிகிச்சைக்காக வாசனை சென்னை அழைத்து செல்வதாக கூறி அவரது நண்பர்கள் சிலர் அழைத்துச்சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், நண்பர் அபீஸ் என்பவரது வீட்டில் அவரை பதுக்கிவைத்துள்ளனர். இதையடுத்து தற்போது டிடிஎஃப் வாசனை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
மோட்டார் வாகன சட்டத்தின்படி ‘பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டிய’ வழக்கில், பிணையில் வர முடியாத பிரிவுகளில் இவர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கிட்டத்தட்ட 6 பிரிவுகளில் இவர்மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கெனவே வாசன் தேசிய நெடுஞ்சாலையில் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டியும், வீலிங் செய்தும் அதிக வழக்குகளுக்கு உள்ளாகியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பு: மித வேகம் மட்டுமே மிக நன்று!