ராங் கால் மூலம் பெண்ணுடன் பழக்கம் - மோசடி கும்பலிடம் பணத்தை இழந்த நகைக்கடை உரிமையாளர்
செய்தியாளர்: ஹாலித் ராஜா
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் ஜெகதீஷ் (28). இவர், தனது மனைவி மற்றும் ஒரே மகனுடன் வசித்துக் கொண்டு அதே பகுதியில் ஸ்ரீ வேல்முருகன் என்ற பெயரில் நகைக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதிய எண்ணிலிருந்து ஜெகதீஷிற்கு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய பெண் ராங் கால் என்று கூறி செல்போன் அழைப்பை துண்டித்துள்ளார்.
இதையடுத்து சில நாட்கள் கழித்து அதே பெண் ஜெகதீஷை சென்போனில் தொடர்பு கொண்டு, தனது பெயர் கிருத்திகா என்று ஆசை வார்த்தை கூறி பேசி வந்துள்ளார். இதைத் தொடர்ந்து இருவரும் தனிமையில் சந்திக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதை நம்பி ஜெகதீசன் கிருத்திகாவை சந்தித்துள்ளார். இருவரும் ஆடைகளின்றி இருந்தபோது, திடீரென கதவை திறந்து நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் உள்ளே வந்து இருவரையும் வீடியோ எடுத்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அந்த நான்கு பேரும், ஜெகதீஷிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். பணம் தர மறுத்தால் வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பி, சமூகவலை தளங்களிலும் பதிவேற்றுவோம் என்று மிரட்டி பேரம் பேசியுள்ளனர். இறுதியாக ஜெகதீசிடம் 2.10 லட்சம் ரூபாய் பணத்தையும் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியையும் பறித்துக் கொண்டு, மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் அதே ஸ்கூட்டியில் ஜெகதீஷை அழைத்து வந்து அருகிலிருந்த பஸ் ஸ்டாப்பில் இறக்கிவிட்டு, விசயத்தை வெளியே சொன்னால் கொன்று விடுவோம் என்று மிரட்டிச் சென்றுள்ளனர்.
பயத்தில் வீட்டுக்குத் திரும்பிய ஜெகதீஷ், மறுநாள் பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறி புகார் அளித்துள்ளார். புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த பெருமாநல்லூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பழனிச்சாமி (51) கிருத்திகா (19), அருண்குமார் (33) ஆகிய மூவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய நெல்சன் (41), நரேஷ் குமார் (39), சுரேஷ் குமார் (36) ராஜசேகர் (48) ஆகிய நான்கு பேரையும் பிடித்து வந்து, அவர்களிடமிருந்து 2.10 லட்சம் ரூபாய் பணமும் இரண்டு பவுன் தங்கச் சங்கிலியையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து கிருத்திகா உட்பட ஏழு பேர் கொண்ட மோசடி கும்பலை கைது செய்த பெருமாநல்லூர் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.