மதுரை | விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மரணம்... வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்..
மதுரை அண்ணாநகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட யாகப்பா நகர் பகுதியை சேர்ந்த தினேஷ் குமார்(30) என்ற இளைஞரை நேற்று அதிகாலை அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பிளவர்ஷீலா தலைமையிலான தனிப்படை காவலர்கள் வீட்டிலிருந்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், நேற்று மதியம் காவல்துறையினர் விசாரணையின்போது தப்பியோடிய தினேஷ்குமார் வண்டியூர் வைகையாற்று கால்வாயில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக அண்ணாநகர் காவல்துறையினர் தினேஷ்குமாரின் பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து பட்டியலின இளைஞர் தினேஷ்குமார் உயிரிழந்த விவகாரத்தில் அண்ணாநகர் காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படையினர் மீது நடவடிக்கை எடுக்ககோரி, தினேஷ்குமார் குடும்பத்தினரும், வழக்கறிஞர்களும் பல்வேறு அமைப்புகளை சார்ந்தவர்களும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 2 ஆவது நாளாக தினேஷ்குமாரின் உடலை வாங்க மறுத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தினேஷ்குமாரின் உறவினர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே, இவ்வழக்கில் நீதி விசாரணை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தினேஷ் குமாரின் தாயார் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரேஷ் பாபு ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, இவ்வழக்கில் விசாரணை நடத்திய நீதிபதிகள் அண்ணாநகர் காவல் நிலையத்தில் சிசிடிவி முறையாக செயல்படுகிறதா என்று கேள்வி எழுப்பினர். மேலும் இந்த காவல் நிலைய ஆய்வாளர் பிளவர்ஷீலா மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் இந்த வழக்கை சம்பந்தப்பட்ட காவல் நிலையம் விசாரணை செய்தால் எவ்வாறு நீதி கிடைக்கும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி புலனாய்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
தொடர்ந்து, காவல் ஆய்வாளர் மீது பட்டியல் இன வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்; காவல் நிலையத்தின் சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க வேண்டும். நீதிபதிகள் இறந்து போன இளைஞர் தினேஷ் குமார் உடல் உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் படி உடனடியாக பிரேத பரிசோதனை செய்து உறவினரிடம் வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இந்நிலையில் அண்ணாநகர் காவல் ஆய்வாளர் பிளவர்ஷீலாவை ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவிட்டிருக்கிறார்.