தருமபுரி: தனியார் பள்ளி தாளாளரை காரில் கடத்திச் சென்ற அரசுப் பள்ளி ஆசிரியர் உட்பட 6 பேர் கைது
செய்தியாளர்: சே.விவேகானந்தன்
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோபாலபுரத்தில் உள்ள மெட்ரிக் பள்ளியின் தாளாளர் செம்முனி (68). இவர், சித்தேரி பேரேரி புதூர் அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் இனியவன் (41) என்பவரின் தாயார் அமிர்தவள்ளியிடம் 15 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பள்ளியை நடத்திக் கொள்ள எழுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. இதில் வரும் லாபத்தில் 10 சதவீதம் வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்தப் பள்ளியில் தற்போது 101 மாணவ மாணவியர் படித்து வரும் நிலையில், செம்முனி பள்ளிக்கு அங்கீகாரத்தை பெற்றுத் தராமல் இருந்துள்ளார். கொடுத்த பணத்தை அமிர்தவள்ளி திருப்பிக் கேட்டும் தரவில்லை என தெரிகிறது. இதனால் ஏ.பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் அமிர்தவள்ளி கடந்த நவம்பர் 18ல் புகார் கொடுத்துள்ளார். ஆனால் செம்முனி விசாரணைக்கு வராமல் இருந்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தில் அமிர்தவள்ளி தரப்பினர் பாப்பிரெட்டிப்பட்டி சாய்பாபா கோயிலில் இருந்த செம்முனியை தாக்கி, ஆசிரியர் இனியவன் உட்பட 6 பேர் நேற்று காரில் கடத்திச் சென்றுள்ளனர். இதுகுறித்து சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவியது.
இதையடுத்து சாய்பாபா அறக்கட்டளை தலைவர் பன்னீர்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி காவலர்கள் காரில் கடத்தப்பட்ட செம்முனியை, சேலம் சாலையில் உள்ள புதுப்பட்டி சுங்கச் சாவடியில் மீட்டனர். இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட ஆசிரியர் இனியவன், தீர்த்தகிரி, அம்பேத்குமார், சுரேஷ், மனோஜ்குமார், யசேந்திரன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.