கோவை | அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மூதாட்டியின் தாலிச் சங்கிலி திருட்டு – ஒருவர் கைது
செய்தியாளர்: பிரவீண்
கோவை பாப்பநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த 20 ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து 21 ஆம் தேதி அவர் உயிரிழந்த விட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடலை பெறுவதற்காக அவரது மகள் செல்வி தீவிர சிகிச்சை பிரிவிற்கு சென்றிருந்தார். அப்போது தனது தாயின் கழுத்தில் இருந்த தாலி சங்கிலி மற்றும் தங்கக் காசுகள் காணாமல் போய் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பந்தய சாலை காவல் நிலையத்தில் செல்வி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், தாலி சங்கிலி திருட்டில் ஈடுபட்டவர் செல்வபுரத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.