கோவை | ”நாங்க என்ன பாரமா?” நான்காவதும் பெண் குழந்தை.. ஏஜெண்டிடம் கொடுத்த தம்பதி.. சிக்கிய கும்பல்!
நான்காவதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், அதனை பெற்றோரிடமிருந்து வாங்கி விற்க முயன்ற பெண்ணை கோவை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அண்மையில் சென்னை புழல் அருகே இதுபோன்று குழந்தைகளை லட்சங்களுக்கு விற்று காசு பார்த்த கும்பல் ஒன்று சிக்கிய நிலையில், இந்த சம்பவமும் கவனிப்பை பெற்றுள்ளது.
அண்மையில் வாட்ஸ்-அப் ஆடியோ ஒன்று திடீரென ட்ரெண்ட் ஆனது. அந்த ஆடியோ மூலம் சென்னையின் புறநகர் பகுதியை மையமிட்டு குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தைகளை வாங்கி விற்று வந்த ஒரு பெரிய கும்பலே சிக்கியது. ஆண் குழந்தைகளை 15 லட்சம் ரூபாய் வரையிலும் பெண் குழந்தைகளை 10 லட்சம் ரூபாய் வரையிலும் அந்த கும்பல் விற்று வந்தது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், இதே போன்றதொரு சம்பவம் கோவை மண்டலத்திலும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கோவையைச் சேர்ந்தவர்கள் பிரகாஷ் - விஜயசாந்தி தம்பதி. இவர்களுக்கு ஏற்கெனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான விஜய சாந்தி, நான்காவதாக ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். கடந்த மாதம் 25ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு பிரசவம் நடந்த நிலையில், நேற்று முன் தினம் அதாவது ஆகஸ்ட் 4ஆம் தேதி டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார். டிஸ்சார்ஜ் ஆன கையோடு பிறந்து 11 நாட்களே ஆன தங்களின் பெண் குழந்தையை, அந்த தம்பதி விற்பதற்காக ஏஜெண்டிடம் கொடுத்துள்ளனர்.
குழந்தைகளை வாங்குவது விற்பது சட்டப்படி இந்தியாவில் குற்றச்செயலாக இருக்கும் நிலையில், பெண் குழந்தைகளை சில பெற்றோர் பாரமாக நினைப்பது இன்று வரையிலும் தொடர்கிறது என்பதே உண்மை. இதற்கு சமூகம் சார்ந்த சிக்கலும் அழுத்தமும் ஒருபுறம் காரணமாக இருக்கும் நிலையில், தங்களுக்கு நான்காவதாக பிறந்த பெண் குழந்தையை பாரமாக நினைத்த பிரகாஷ் - விஜயசாந்தி தம்பதி, வீரம்மாள் என்கிற ஆனந்தி சிந்து என்ற குழந்தை விற்கும் ஏஜெண்டிடம் தங்கள் குழந்தையை விற்பதற்காக கொடுத்துள்ளனர்.
குழந்தையை வாங்கிக் கொண்ட ஆனந்தி சிந்து, திருப்பூரில் உள்ள தனது தோழி வீட்டில் வைத்து குழந்தையை விற்க முயன்றுள்ளார். இது தொடர்பாக குழந்தைகள் நல உதவி எண்ணான 1098க்கு அழைப்பு வந்துள்ளது. அதன்பேரில் அங்கு சென்ற கோவை மாவட்ட குழந்தைகள் நல உதவி மைய அதிகாரிகள், குழந்தையை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அந்த பெண்ணை கையும் களவுமாக பிடித்துள்ளனர். மாவட்ட குழந்தைகள் நல உதவி மைய ஒருங்கிணைப்பாளர் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் திருப்பூர் விரைந்த கோவை மாவட்ட காவல் துறையினர், ஆந்தி சிந்துவை கைது செய்தனர். தொடர்ந்து குழந்தையை ஏஜெண்டுக்கு விற்ற தம்பதிக்கும் காவல் துறையினர் வலை விரித்துள்ளனர். பிஞ்சு குழந்தைகளை பொருள்போல பணத்துக்காக விற்க முயன்ற பெண் சிக்கிய நிலையில், அவரின் பின்புலம் என்ன?... அவருக்கு பின் ஏதேனும் கும்பல் உள்ளதா? என்ற தகவல்களையும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். சரியான புரிதல் இல்லாததால் பெற்றோர் இருந்தும் இன்று அந்த பெண் குழந்தை காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.