தெரு நாயை துப்பாக்கியால் சுட்டபோது, சிறுவன் மீது பாய்ந்த குண்டு.. செங்கல்பட்டில் நடந்த சம்பவம்
செய்தியாளர்: உதயகுமார்
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொங்கரந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவன் குறளரசன் என்பவர் அதே பகுதியில் உள்ள கடைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் சுற்றித் திரியும் உடல் நலம் பாதிக்கப்பட்ட தெருநாயை சரத்குமார் என்ற நாடோடி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர் துப்பாக்கியால் தெரு நாயை சுட்டுள்ளார்
அப்பொழுது அந்த துப்பாக்கியில் இருந்து வெளிப்பட்ட ஈய குண்டுகள் சுவற்றின் மீது பட்டு தவறுதலாக அந்த வழியாக நடந்து சென்ற பள்ளி மாணவன் குறளரசன் தலையில் பாய்ந்துள்ளது. இதில், காயமடைந்த சிறுவனை அவர்களது பெற்றோர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்
இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக சித்தாமூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசன் மற்றும் நரிக்குறவர் சரத்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.