பெங்களூரு | ரூ.10 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் - நைஜீரிய இளம்பெண் கைது
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
பெங்களூரு சிக்கஜாலா அருகே ராஜனுகுண்டே பகுதியில், இளம்பெண் ஒருவர் போதைப் பொருள் விற்பதாக சி.சி.பி., போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிக்கஜாலா போலீசாருடன் இணைந்து ராஜனுகுண்டேயில் சி.சி.பி, போலீசார், ரோந்து சென்றனர். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் தனியாக நின்றிருந்த இளம் பெண் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.
அதில், ஒரு கவரில் எம்.டி.எம்.ஏ., போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 5.32 கிலோ போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச சந்தை மதிப்பு 10 கோடி ரூபாய் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜீரியாவின் அகின்வுன்மி பிரின்சஸ் இபியோலு, (25) என்பது தெரிய வந்தது
இவர், 2022ல் தெலங்கானா பல்கலைக்கழகத்தில் படிக்க கல்வி விசா பெற்றுள்ளார். ஆனால், கல்லூரியில் சேராமல், பெங்களூரு வந்து சிக்கஜாலாவில் வாடகை வீட்டில் தங்கியிருந்து, போதைப் பொருள் விற்று வந்தது, தெரியவந்தது. இவர், டில்லியில் உள்ள நைஜீரிய நண்பர்களிடம் இருந்து, போதைப் பொருளை வாங்கி அதிக விலைக்கு விற்று அதில் கிடைக்கும் பணத்தை, ஆடம்பரமாக செலவு செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இவர் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.