கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில், ஸ்கிராப் (SCRAP TRADERS) தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் தொழிற்கூடங்களில் கோவை மண்டல ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவினர் சோதனை நடத்தினர். அதில் 4 நிறுவனங்கள் டி.எம்.டி. கம்பிகள் உற்பத்தி செய்யும் பெரும் நிறுவனங்களுக்கு போலி இன்வாய்ஸ் தயாரித்து அளித்தது தெரியவந்தது.
97.87 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி இன்வாய்ஸ் மூலம் 13 கோடி ரூபாய் input tax credit பெற்றதும் தெரியவந்துள்ளது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. போலியாக இன்வாய்ஸ், இ-வே பில் ஆகிய ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்தது மற்றும் போலி கணக்கு காட்டி, அதற்கு input tax credit பெற்றது தொடர்பாக முக்கிய நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்
இந்த வழக்கில் இன்னும் சிலரை கைது செய்ய வேண்டி உள்ளதால், கைது செய்யப்பட்ட நபரின் விவரங்களை வெளியிட முடியவில்லை என்றும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஜி.எஸ்.டி. புலனாய்வு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.