சீனாவில் கொல்லப்பட்ட ஒரு நாய்! சர்வதேச பிரச்சனையாக மாறிய அதிர்ச்சிப் பின்னணி என்ன?
செய்தியாளர் - ஐடா அருட்செல்வி
வாங் வாங் மரணத்துக்குப் பிறகு, பலர் சமூக வலைதளங்களில் விலங்கு கொடுமைக்கு எதிராக குரல் எழுப்பினர். மேலும், சீனாவின் பல இடங்களில் நினைவு பதாகைகள், விளம்பர பலகைகள் மூலம் அந்த நாய்க்கு அஞ்சலி செலுத்தி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
சம்பவம் தொடர்பாக சீன அதிகாரிகள், குற்றம் செய்த சிறுவர்கள் குற்றவியல் பொறுப்புக்கான வயதை எட்டாததால், அவர்களை சிறப்பு கல்வி மையத்திற்கு அனுப்பியதாக தெரிவித்தனர். அதே நேரத்தில், சம்பவம் தொடர்பான பதிவுகளைப் பகிர வேண்டாம் என்றும் இணைய பயனர்களை கேட்டுக்கொண்டனர். ஆனால், இந்த அணுகுமுறை மக்களின் எதிர்ப்பை மேலும் அதிகரித்தது.
சீன அதிகாரிகள் பின்னர் சமூக வலைதள பதிவுகளை நீக்கத் தொடங்கினர். நினைவு விளம்பரங்களும் பல இடங்களில் அகற்றப்பட்டன. பிரபலங்களின் பதிவுகளும் நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இருப்பினும், வாங் வாங் விவகாரம் சீனாவைத் தாண்டி சர்வதேச கவனத்தை பெற்றது. ஹாங்காங், நியூயார்க் உள்ளிட்ட இடங்களிலும் ஆதரவு பிரச்சாரங்கள் நடைபெற்றன. நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் வைக்கப்பட்ட விளம்பரத்தில், “அவள் நேசிக்கப்பட்டாள்... அவள் வாழ விரும்பினாள்... அவள் இன்னும் இங்கே இருக்க வேண்டும்” என்ற வாசகம் இடம்பெற்றது. விலங்கு பாதுகாப்பு சட்டத்திற்கான கோரிக்கையை இந்த சம்பவம் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.

