திருப்பூர்: உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருந்த 7 பங்களாதேஷ் இளைஞர்கள் கைது
செய்தியாளர்: சுரேஷ் குமார்
திருப்பூர் மாவட்டத்தில் பங்களாதேைஷச் சேர்ந்த இளைஞர்கள் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி பணியாற்றி வந்த காரணத்துக்காக கடந்த 15 நாட்களில் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூரில் மேலும் பங்களாதேஷ் இளைஞர்கள் தங்கி உள்ளார்களா என போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பூர் வடக்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த 13 புலம்பெயர் தொழிலாளர்களை பிடித்த வடக்கு போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கொங்கு மெயின் ரோடு பவானி நகரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து சிறப்பு நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் செந்தில் தலைமையில் சிறப்பு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் பிரகாஷ் உள்ளிட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதில், 7 பேர் மட்டும் பங்களாதேைஷ சேர்ந்தவர்கள் என்றும் மீதமுள்ள 6 நபர்கள் ஒடிசா, அசாம், மேற்குவங்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதனை அடுத்து உரிய ஆவணங்கள் இன்றி தங்கி இருந்த இம்ரான் ஹசைன், நூர் நபி, ராபினி மோண்டல், ஷாஜகான், மோக்தர், ரபிகுல் இஸ்லாம், கபீர் ஹூசைன் ஆகிய 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.