செல்போன் பறிப்பின்போது நிகழ்ந்தகொடூரம்: தொழிலாளியை கொலை செய்ததாக சிறுவன் உள்ளிட்ட மூவர் வாக்குமூலம்!
செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்
விழுப்புரம் மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் ராஜேஷ் (30) செல்லம்மாள் தம்பதியர். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும், பத்து மாத பெண் குழந்தை என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ராஜேஷின் பெற்றோர் குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கத்தில் உள்ள செங்கல் சூளையில் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களின் கடனை அடைப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் செங்கல் சூளையில் தங்கி பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு செம்பரம்பாக்கம் ஏரிக்கரை பகுதியில் ராஜேஷ் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவரை கத்தியால் வெட்டிவிட்டு அவரிடமிருந்து செல்போன், பணம் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இதையடுத்து காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக குன்றத்தூர் போலீசார் பதிவு செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை தொடர்ந்து ஆய்வு செய்து வந்தனர்.
இதைத்; தொடர்ந்து தெற்கு மலையம்பாக்கத்தை சேர்ந்த விஜய் (23), பொன்னேரியை சேர்ந்த திருமலை (19), மற்றும் 14 வயது சிறுவன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மூவரும் சேர்ந்து ராஜேஷை கத்தியால் வெட்டிவிட்டு அவரிடமிருந்து செல்போன், பணம் ஆகியவற்றைப் பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர். சிறுவன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.