இளம் பெண் பொறியாளர் சுட்டுக் கொலை: காதலனை தேடுகிறது போலீஸ்
டெல்லியில் அடுத்த நொய்டாவில் 23 வயது இளம் பெண் பொறியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
அஞ்சலி ரத்தோர் என்ற அந்தப் பெண் லாவா கம்பெனியில் பொறியாளராக வேலை பார்த்து வந்தார். அடுக்குமாடிக் குடியிருப்பில் மூன்றாவது மாடியில் இருந்த பிளாட்டில் ஆறு பெண்களுடன் வசித்து வந்த அஞ்சலிக்கு இன்று அதிகாலை தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து கதவைத் திறந்து அவர் வெளியே வந்த அவர் கீழ்த்தளத்திற்கு வந்திருக்கிறார். அங்கு திடீரென்று அவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். உடனடியாக அந்தப் பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நொய்டா எஸ்பி அருண் குமார் கூறுகையில், இந்தக் கொலைக்குப் பின்னால் அந்தப் பெண்ணின் ஆண் நண்பர் இருக்கலாம் என சந்தேகப்படுவதாகவும் குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் கூறியுள்ளார். போலீசார் சந்தேகப்படும் அந்த நபர் அப்பெண்ணின் காதலராக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. போலீசார் தற்போது அந்த நபரைத் தேடி வருகின்றனர்.