3 இயக்குநர்கள் மாற்றம்.. 5ரூ டாக்டர் கதையா? ரஜினியின் `தர்மன்' கடந்து வந்த பாதை!
ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் அறிவிக்கப்பட்ட படம், `தலைவர் 173'. இப்படத்தின் பெயர் `தர்மன்' எனவும், அஷ்வத் மாரிமுத்து இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென இத்தனை விஷயங்கள் நடந்தாலும் இந்தப் படம் கடந்தவந்த பாதை சற்று கடினமானது.
`ஜெயிலர் 2' படத்தை முடித்த பின்னர் இந்தப் படத்தில் ரஜினி `தலைவர் 173'ல் நடிக்கிறார் எனவும், அப்போது அந்தப் படத்தை சுந்தர் சி இயக்குவார் எனவும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு வாரத்துக்குள்ளாகவே இந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டார் சுந்தர் சி. இதற்குக் காரணம் சுந்தர் சி சொன்ன கதை ரஜினிக்கு திருப்தியாக இல்லை என்பதுதான் எனச் சொல்லப்பட்டது. இதன் பின்னர் ரஜினிகாந்த் படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி எழுந்தது. பல இளம் இயக்குநர்களிடமும் கதை கேட்க துவங்கினார் ரஜினி.
அதில் சிபி சக்கரவர்த்தி, ராம்குமார், அஷ்வத் மாரிமுத்து என மூவர் இறுதிக்கட்டத்தில் வந்தனர். சிபி சக்கரவர்த்தியை தேர்வு செய்து `தலைவர் 173' மீண்டும் துவங்கினார்கள். இப்படத்தின் வேலைகளையும் பரபரப்பாக துவங்கிய சிபி, ஸ்க்ரிப்ட் முடித்த புகைப்படத்தையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. ஆனால் அதன் பின்னர் இப்படத்தை சிபி இயக்கப் போவதில்லை மீண்டும் இயக்குநர் மாற்றம் என தகவல்கள் பரவின. அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் இல்லை என்றாலும் ராஜ்கமல் நிறுவனம் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டது. இதன்மூலம் ’தலைவர் 173’ படத்தை சிபிதான் இயக்குகிறார் என்பதைச் மறைமுகமாக ராஜ்கமல் தரப்பு சொல்கிறது எனச் சொல்லப்பட்டது.
இன்று அதனை அதிகாரப்பூர்வமாகவே உறுதி செய்துள்ளனர். அதன்படி, இன்று இப்படத்தின் பூஜையுடன் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்வில் ரஜினி சொன்னதை வைத்துப் பார்க்குமபோது, இந்தப் பட்த்தை முதலில் இயக்குவதாக இருந்தது கே எஸ் ரவிக்குமார்தான். கடைசியாக இது அஷ்வத் மாரிமுத்துவிடம் வந்திருக்கிறது. இந்தக் கதை 5 ரூபாய் டாக்டர் வாழ்க்கை பற்றியது என தகவல்கள் பரவியது. ஆனால் அதை அஷ்வத் இந்த நிகழ்வில் மறுத்துவிட்டார்.
முன்பு அளித்த பேட்டி ஒன்றில் இந்தக் கதையில் வில்லன் வேடத்தை பற்றி மிகவும் ரசித்துப் பேசியதாக கூறினார் அஷ்வத். எனவே, இதில் யார் வில்லனாக நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ’சந்திரமுகி’ படத்தில் மனநல மருத்துவராக நடித்திருந்தார் ரஜினி. ஆனால் இப்போது அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவராக நடிக்கிறார் ரஜினி. இந்த வேடத்தில் ரஜினி நடிப்பது இதுவே முதல் முறை.
சிம்ரன், ராஷி கண்ணா முதன்மை வேடங்களில் நடிக்க, அனிருத் இசை, நிகேத் ஒளிப்பதிவு, அன்பறிவ் சண்டை என வலுவான கூட்டணி அமைந்துள்ளது. நாளை ரஜினியின் இன்ட்ரோ பாடல் காட்சி படமாக்கப்பட உள்ளதாம். பல இயக்குநர் மாற்றம், படப்பிடிப்பு தாமதம் போன்ற விஷயங்கள் நடந்ததால், எவ்வளவு விரைவாக இப்படத்தை முடிக்க முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் முடிக்கும்படி அன்பான அஷ்வத்திடம் வேண்டுகோளை வைத்துள்ளாராம் தயாரிப்பாளர் கமல்ஹாசன்.

