“என் தொழில் மேல சத்தியமா சொல்றேன்..”தமிழர்கள் குறித்தான சர்ச்சை பதிவு குறித்து நடிகை தன்யா விளக்கம்

தமிழர்களை இழிவுபடுத்தும் வகையில் வெளியான பதிவு குறித்து தன்யா பாலகிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளார்.
தன்யா பாலகிருஷ்ணா
தன்யா பாலகிருஷ்ணாpt web

நடிகர் ரஜினிகாந்த் நடித்து, அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள திரைப்படம், லால் சலாம். இத்திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்னு விஷால், நடிகை தன்யா பாலகிருஷ்ணா என பலர் நடிக்கின்றனர். இன்னும் சில நாட்களில் இப்படம் திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.

இத்தகைய சூழலில் அவர் சில ஆண்டுகளுக்கு முன் தமிழர்களை மரியாதைக் குறைவாக பேசியதாக பதிவொன்றை குறிப்பிட்டு பலரும் லால் சலாம் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். படத்தை வெளியிட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக்கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் சென்னை ஆணையரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.

லால் சலாம் - நடிகை தன்யா பாலகிருஷ்ணா
லால் சலாம் - நடிகை தன்யா பாலகிருஷ்ணாபுதிய தலைமுறை

இந்நிலையில் தன்யா பாலகிருஷ்ணா விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “நான் செய்யும் தொழில் மேல் சத்தியம்” என அறிக்கையை ஆரம்பித்துள்ளார். அதில், “கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் தமிழர்களை இழிவுபடுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல. 12 வருடங்களுக்கு முன்பு இது நடந்தபோதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன்... அதையே இப்பொழுதும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்...

அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை. அந்த ஸ்கீர்ன் ஷாட், ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும் என் சக்திக்கு உட்பட்டு என்னால் முடியவில்லை. இந்த 12 வருடங்கள், நான் இதைப் பற்றி பேசாமல் இருந்ததற்குக் காரணம் அந்த சம்பவம் நடந்த சமயத்தில் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் வந்த அச்சுறுத்தல்கள்தான். அதிலிருந்து விலகி இருப்பதே எனக்குச் சரி என்று பட்டது. இப்பொழுது இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் இதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்த கருத்து நான் கூறியதே அல்ல.

நடிகை தன்யா பாலகிருஷ்ணா
நடிகை தன்யா பாலகிருஷ்ணா

நான் என் சினிமா பயணத்தைத் துவங்கியதே தமிழ் சினிமாவில் தான். தமிழ் சினிமாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் என்றும் நன்றி கடன்பட்டுள்ளேன். அப்பொழுதும் இப்பொழுதும் என் நெருங்கிய நண்பர்களில் பலரும் தமிழர்களே... அதனால் விளையாட்டுக்குக்கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல நான் என் கனவிலும் நினைக்கமாட்டேன். என் ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமா ரசிகர்களும் ஊடகங்களும் கொடுத்த ஆதரவே இத்தனை வருடம் தொடர்ந்து நடிக்க எனக்கு ஊக்கமாய் அமைந்திருக்கிறது.

மனிதாபிமான அடிப்படையிலும், நான் யாரையும் காயப்படுத்தும் விதத்தில் எந்தவித சொல்லையோ செயலையோ செய்யக்கூடியவள் அல்ல. இந்த சம்பவம் நடந்ததற்குப் பின் நான் சில தமிழ் திரைப்படங்களும் (ராஜா ராணி, நீதானே என் பொன் வசந்தம், கார்பன்) சில தமிழ் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளேன். அப்போது இது போன்ற எதிர்வினைகள் எதுவும் நேரவில்லை.

சர்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும், துரதிர்ஷ்டவசமாக என் பெயர் இதில் சம்மந்தப்படுத்தப்பட்டுவிட்டது... அதனால் நான் தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த சர்ச்சையினால் ரஜினிகாந்த், ஐஷ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவர்களுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்கும் மனவுளைச்சலுக்கும் எனது மனவருத்தத்தை தெரிவித்து கொள்கின்றேன்.

நான் இதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாமல் தவித்துக்கொண்டு உங்கள் முன் இந்த கோரிக்கையை வைக்கிறேன். என் தொழில் மேல் சத்தியம் செய்து நான் கூறும் இந்த உண்மையை ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு...” எனத் தெரிவித்துள்ளார்”

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com