ஓடிடியிலும் செம்ம வரவேற்பு பெற்ற `சக்தித் திருமகன்' - திடீரென கிளம்பிய கதை திருட்டு சர்ச்சை!
விஜய் ஆண்டனி நடிப்பில் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவான படம் `சக்தித் திருமகன்'. இந்தப் படம் செப்டம்பர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மேலும் இப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் அக்டோபர் 24ம் தேதி வெளியானது. சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி இருந்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை சமீபத்தில் பார்த்த ஷங்கர் பாராட்டி பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், இப்படத்தின் கதை தன்னுடைய கதை என சுபாஷ் சுந்தர் என்பவர் பதிவிட்டிருக்கிறார். இது பற்றி எழுதி இருந்த அவர் இக்கதையில் மாதவனை வில்லனாக மனதில் வைத்து 3 வருடங்களுக்கு முன் எழுதியதாகவும், Dream warriors அனுப்பியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். அருண் பிரபுவின் முதல் படம் அருவியை தயாரித்தது Dream warriors தான் என்பதால் அவரது கதை அங்கிருந்து சென்றிருக்க கூடும் என சந்தேகித்துள்ளார். மேலும் அவர் எழுதிய கதை பக்கங்களின் சில இணைப்புகளையும் இணைத்துள்ளார்.
அவருடைய பதிவு பின்வருமாறு "சக்தித் திருமகன்- திருட்டு கதை
எந்த பதவியிலும் இல்லாமல் இந்தியாவையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும் ஒரு வில்லன் கேரக்டரை உருவாக்கி அதில் மாதவனை உருவகம் செய்து நான் 3 வருடங்களுக்கு முன்னர் எழுதி வைத்திருந்த காப்பி ரைட்ஸ் வாங்கிய கதைதான் “தலைவன்”. அதன் SNAP shotsai குடுத்துள்ளேன், படித்துப் பாருங்கள். மாதவன் ஒரு இந்துத்துவ பிடிப்புள்ள வில்லன், நாட்டை சர்வாதிகாரத்துக்கு கொண்டு வரத் துடிப்பவன். ஹீரோவின் குடும்பம் அழிய காரணமாய் இருப்பான், அவனிடம் கூடவே ஹிரோ இருப்பான், ஹீரோவுக்கு பயிற்சி அளித்து தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வான். பின் ஒரு கட்டத்தில் ஹிரோ அவனுக்கு எதிராக திரும்புவான்.
ஹீரோ தான் சேர்த்த பணத்தை பிட்காயினாக மாற்றி அதை சரியான நேரத்தில் பயன்படுத்தி வில்லனை எதிர்க்கிறான். ஹீரோ மீது நிதி மோசடி புகாரை உருவாக்குகிறான். ஹீரோவை தீவிரவாதியாக சித்தரிக்கிறான். ஹீரோ வில்லனுடைய நிறுவங்களை நஸ்டத்துக்கு உள்ளாகுவது. ஹீரோவின் அம்மாவை விபச்சாரியாக சித்தரித்து சிறைக்கு அனுப்புவான் வில்லன் என் கதையில்.. இதிலும் அப்படி விபச்சாரியாக சித்தரித்திருப்பார்கள்.
என் கதையில் இறுதியில் வரும் வசனம் “உன்னுடைய மரணம் புரட்சியை விரும்பும் ஒவ்வொருவரையும் பயமுறுத்தும், மக்கள் கடுமையான கஸ்டம் அனுவவிப்பார்கள், குறைந்த கூலிக்கு வேலை செய்வார்கள், உரிமைகளைப் பேச யோசிப்பார்கள், மக்களை சந்தோசப்படுத்தி ஓட்டு வாங்க வேண்டியதில்லை சர்வாதிகாரியாக நான் இருப்பேன்” என்பான் மாதவன். ஹீரோ என் கதையிலும் சாக மாட்டான்.. இதில் போலவே வில்லனை கொன்றுவிட்டு தப்பிப்பான்.. வெளியில் ராணுவம் நிற்க.
என் கதையை Dream warriorskku அனுப்பிய சான்று இருக்கிறது, சக்தி திருமகனின் இயக்குநர் முதல் படம் அவர்களுக்குதான் செய்தார். கதை இலாகா என்கிற பெயரில் , புதியவர்களுக்கு உதவுகிறோம் என்று கதையை வாங்குகிறார்கள், அதன் பின் அது எங்கே யாருக்கு எந்த வடிவில் செல்கிறது என்பது யாருக்கு வெளிச்சம்?
சும்மா விடுவதாக இல்லை, சின்ன சின்ன மாற்றங்களை செய்துவிட்டுத் தப்பித்துவிடலாம் என்றால் எப்படி?
கதையை copy rights of indiavil register செய்து வைத்துள்ளேன் , டாக்குமென்ட்ஸ் எல்லாம் என்னிடம் இருக்கிறது, வருடம் 2022. தொடர்பான படங்களை பதிவிட்டுளேன். கேஸ் போடுவதாகவும் உள்ளேன். அவர்களுக்கு அழுத்தம் கொடுக்க உதவுங்கள், ஒருவரைப் போல் ஒருவர் இவ்வளவு பொருத்தங்களுடன் சிந்திக்க முடியாது, அப்படியே இருந்தாலும் முதலில் சிந்தித்து பதிவு செய்பவருக்கே உரிமை. ஒழுக்கத்தை, நேர்மையை போதிப்பதாக படம் இருப்பதைப் போல அதை எடுப்பவர்களும் இருந்தால் நன்று." எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புகாருக்கு மறுப்பு தெரிவித்து இயக்குநர் அருண் பிரபு தனது இன்ஸ்டாவில் விளக்கம் அளித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்சினிமாவில் கதை திருட்டு சர்ச்சை வருவது புதிதல்ல. நடிகர் விஜய்யின் ‘கத்தி’ ஆரம்பித்து நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ வரை கதை திருட்டு பற்றிய செய்திகள் அவ்வவ்போது எழுவது வழக்கம் தான். இதுபோன்ற கதை திருட்டு சர்ச்சைகள் எழும் போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் முறையிடுவது வழக்கம். அதில் இதுதொடர்பாக விசாரித்து தீர்வு காண்பார்கள். அதனால், சர்ச்சைகள் எழுவது இயல்பு தான் ஆனால், விசாரணைக்கு பின்பே முழு விவரமும் உண்மையும் தெரியவரும்.

