"என் பாட்டுல நானே நடிக்க ஆரம்பிச்சது ஏன்னா.." - சாய் அபயங்கர் சொன்ன காரணம் | Sai Abhyankkar
`ட்யூட்' படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான சாய் அப்யங்கர், இப்போது பரபரப்பாக பல படங்களில் பிஸி. அடுத்தாக சூர்யாவின் கருப்பு, அல்லு அர்ஜூன் - அட்லீ கூட்டணியில் உருவாகும் படம் என பணியாற்றி வருகிறார். சினிமாவில் பிரபலமாகும் முன்பு சாய் அப்யங்கர் தனது தனியிசை பாடல்கள் மூலம் மிகவும் பிரபலமானார். அவரின் `கட்சி சேர', `ஆச கூட', `சித்திர புத்திரி', `விழி வீக்குற' போன்ற பாடல்கள் பெரிய ஹிட்டானது. சினிமாவில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், சமீபத்தில் தன் ஐந்தாவது இன்டி பாடல் `பவழ மல்லி' வெளியிட்டார்.
இது தொடர்பான பேட்டி ஒன்றை கொடுத்த சாய் அப்யங்கரிடம், உங்களுடைய பாடல்களில் நீங்களே நடிப்பதன் காரணம் என்ன? எனக் கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்னவர் "முதல் பாடல் உருவாக்கிய போது, அதன் வீடியோவில் நடிக்க ஒரு ஆண் நடிகரை முடிவு செய்து வைத்திருந்தோம். எல்லாமே ஏற்பாடு செய்து வைத்திருந்தோம். படப்பிடிப்புக்கு இரு நாட்கள் முன்பு அந்த நடிகரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அந்த சமயத்தில் என் நண்பன் `ஏன் நீயே நடிக்கக் கூடாது' என யோசனை சொன்னான்.
நானும் அதற்கு சம்மதம் சொல்லி நன்றாக இருந்தால் வைத்துக் கொள்ளுங்கள் என நடித்தேன். அது நல்ல முறையில் வரவேற்கப்பட்டது. அந்தப் பாடலின் புரோமோ வீடிவோவில் இருந்தே எனக்கு நல்ல பாராட்டுகளை பார்வையாளர்கள் கொடுத்தனர். அதை எல்லாம் பார்க்கையில், அதை மதித்து இன்னும் நன்றாக பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் வந்தது." என்றார்.

