"மாதவிடாய் ஒரு excuse அல்ல..." - சர்ச்சையான ஸ்ரீலீலா பேச்சு | Sreeleela
தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது அங்கு முன்னணி நடிகையாக வளம் வருபவர் ஸ்ரீலீலா. தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த `பராசக்தி' படம் மூலம் அறிமுகமானார். இவர் பவன் கல்யாணுடன் நடித்த `உஸ்தாத் பகத் சிங்' படம் கடந்த மாதம் வெளியானது. இப்படம் வெளியான பின்பு பெண்கள் குழுவுடன் உரையாடிய ஸ்ரீலீலா சொன்ன ஒரு பதில் இப்போது இணையத்தில் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.
அந்த உரையாடலில் ஒரு பெண் "ஒரு பெண்ணாக நீங்கள் திரைத்துறையில் சந்தித்த பெரிய சவால் எது? அதனை எப்படி கடந்து வந்தீர்கள்? எனக் கேட்டதும், "உங்கள் வாழ்க்கையில் Emotional Quotient தான் உங்களுடைய வரமும் சாபமும். அதை வைத்து தான் என்னுடைய எனர்ஜியின் அளவு இருக்கும். PMS (Premenstrual Syndrome) அல்லது மாதவிடாய் காலத்தை எடுத்துக் கொண்டால் கூட, அதை தாண்டி எப்படி இயங்குகிறேன் என்பதில் கவனம் செலுத்துவேன். மற்ற எல்லாவற்றையும் சிந்தனையில் இருந்து கையாள முடியும். ஆனால் உணர்வு ரீதியான விஷயங்களை கையாள்வது முக்கியம்.
நான் எந்தெந்த பாடல்களுக்காக பெரிதும் பாராட்டபட்டிருக்கிறேனோ, அவற்றில் பெரும்பாலான பாடல்களுக்கு நடனம் ஆடும் போது நான் எனது மாதவிடாய் காலத்தில் தான் இருந்திருக்கிறேன். அதனால் அது எந்த வகையிலும் ஒரு சாக்குப்போக்கு அல்ல. நாம் சக்திவாய்ந்த விஷயங்களை விரும்பும் போது, எங்களுக்கும் எல்லாம் சமமாக கிடைக்க வேண்டும் என சொல்லும் போது, நாம் நம் உடலியல் தடைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும் என நினைக்கிறேன். எனவே உளவியல், உடலியல், இவை எதுவுமே ஒரு சாக்கு அல்ல." என்றார்.
மாதவிடாய் என்பது பெண்ணுக்கு பெண் வெவ்வேறு விதமாக நிகழும் ஒரு விஷயம். அதனை பொதுமைப்படுத்தி பேசுவது சரியா? அதிலும் ஸ்ரீலீலா நடிகை மட்டுமல்ல மருத்துவம் பயின்ற ஒருவரும் கூட. அவர் இப்படி பேசுவது சரியா? எனப் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

