`சேயோன்' முருகனுக்கு எதிரான கதையா? - சிவக்குமார் முருகேசன் விளக்கம் | Seyon | Sivakumar Murugesan
சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் 'சேயோன்' படம் முருகனுக்கு எதிரானது அல்ல. இது அனைத்து தெய்வங்களுக்கும் மரியாதை தரும் சரியான படமாக இருக்கும் என அவர் விளக்கம் அளித்தார். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்து சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் நேற்று வெளியான படம் `தாய் கிழவி'. இப்படத்தின் முதல் காட்சியை படக்குழுவினர் மதுரை கோபுரம் சினிமாஸில் பார்த்தனர். `தாய் கிழவி' காட்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தது படக்குழு. மேலும் இயக்குநர் சிவக்குமார் முருகேசனிடம் அவரின் அடுத்த படமான `சேயோன்' பற்றி கேள்வி கேட்கப்பட்டது.
முதலில் மதுரையில் படம் பார்த்தது குறித்து பேசிய சிவக்குமார் முருகேசன் "நான் இயக்குநராக வேண்டும் என ஆசைப்பட்ட எல்லோருடனும் இணைந்து முதல் காட்சியை பார்த்தேன். சிவகார்த்திகேயன் சாரும், ராதிகா மேடமும் அதற்காக தான் மதுரைக்கு கிளம்பி வந்தார்கள். அது பெரிய மகிழ்ச்சியை தந்துள்ளது." என்றார்.
அடுத்த படம் `சேயோன்' விருமாண்டி கதை என்றால் அது முருகனுக்கு எதிரான கதையா? என்றதும் "கண்டிப்பாக ரெண்டு தெய்வங்களை கும்பிடுபவர்களின் கதையும் அதில் இருக்கிறது. மேலும் அது யாருக்கும் எதிராகவோ, யாருக்கும் சாதகமான படமாகவோ இருக்காது. எல்லா தெய்வங்களுக்கும் மரியாதை தருகிற சரியான படமாகத் தான் இருக்கும்." என்றார் சிவகுமார் முருகேசன். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக்கவுள்ள இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிட தக்கது.

