அரசனில் விஜய் சேதுபதி விலகலா? வாடிவாசல் வருமா? - தாணு தந்த அப்டேட் | Thanu | Arasan | Vaadivaasal
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் தாணு. இவர் தயாரிப்பில் விஜய் நடித்து அட்லீ இயக்கிய `தெறி' படம் இன்று ரீ-ரிலீஸ் ஆகிறது. இதனை முன்னிட்டு பேட்டி அளித்த தாணு, அடுத்ததாக அவர் தயாரித்துக் கொண்டிருக்கும் படங்கள் பற்றிய அப்டேட்களைக் கொடுத்துள்ளார்.
அப்பேட்டியில் ’அரசன்’ படம் பற்றி பேசியபோது, "மூன்று நாட்களுக்கு முன்புதான் சிம்பு சென்னை வந்தார். மீண்டும் மார்ச்சில் படப்பிடிப்பு துவங்கும். விஜய் சேதுபதி படத்திலிருந்து விலகிவிட்டதாக வதந்திகள் பரவுகின்றன. இதுபோன்ற செய்திகள் எல்லாம் ஒன்று என்னிடம் இருந்தோ, இயக்குநரிடம் இருந்தோ அல்லது தம்பி விஜய் சேதுபதியிடம் இருந்தோதான் வர வேண்டும். எந்தச் செய்தி போட்டால் கவனம் கிடைக்கும் என இதுபோன்ற பொய்ச் செய்திகளைப் பரப்புகிறார்கள்" என்றார்.
வெற்றிமாறன் படம் இயக்குவதில் தாமதம் என்ற குற்றச்சாட்டுக்கு பதில் சொன்னவர், "வெற்றிமாறன் படப்பிடிப்பு தாமதமாகச் செய்வார் என்ற பார்வை ஒன்றும் இருக்கிறது. அவர் ’அசுரன்’ மட்டுமல்ல, எல்லாப் படத்தையும் விரைவாகத்தான் இயக்குவார். அவருக்கு கொரோனா மூன்று முறை தாக்கியது, இன்னொரு படத்தில் சூரி நடித்துக் கொண்டிருந்த சயமத்தில் அவருக்கு ’அண்ணாத்த’ படத்தை முடித்துக் கொடுக்க வேண்டிய சூழல். இவை எல்லாம்தான் தாமதத்துக்குக் காரணமே தவிர, அந்த தம்பியால் தாமதமானது கிடையாது. அதேபோல சிம்புவும் தன்னுடைய காட்சி முடிந்த பின்னால்கூட கேரவன் போகாமல், ஸ்பாட்டில் மற்றவர்கள் நடிப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறாராம், இதை இயக்குநரே சொன்னார். பெரிய லெவலில் இந்தப் படம் பேசப்படும், வசூலில் விஸ்வரூபமாக இருக்கும். விஜய் சேதுபதி - சிம்பு சந்திக்கும் காட்சி எல்லாம் பிச்சுக்கும். ஆனால் படத்தின் ரிலீஸ் பற்றி இயக்குநர்தான் சொல்ல வேண்டும்" என்றார்.
இறுதியாக ’வாடிவாசல்’ மற்றும் ’ட்ரெயின்’ படங்கள் பற்றிப் பேசியபோது, " ‘வாடிவாசல்’ படம் அனிமேட்ரானிக்ஸ் பணிகள் முடிந்த பின்னர் துவங்கிவிடும். ’ட்ரெயின்’ படத்தின் வேலைகள் முடிந்து கிராஃபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுவும் இந்த சம்மருக்கு வெளியாகிவிடும்" என்றார் தாணு.

