" 'எதிர்நீச்சல்' எடுத்தபோது சிவா ஸ்டார் கிடையாது.." - துரை செந்தில்குமார் | Sivakarthikeyan
`எதிர்நீச்சல்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் துரை செந்தில்குமார். அடுத்ததாக `காக்கிசட்டை', `கொடி', `பட்டாஸ்', `கருடன்' போன்ற படங்களை இயக்கியவர் தற்போது லெஜெண்ட் சரவணன் நடிப்பில் `லீடர்' படம் இயக்கியுள்ளார். நாளை இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில் புரமோஷனுக்காக பல பேட்டிகளை அளித்து வருகிறார். அப்படி அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'சிவகார்த்திகேயன், தனுஷ் என ஸ்டார்களை இயக்கிவிட்டு, இப்போது சரவணன் படத்தை இயக்கி இருக்கிறீர்களே' என்ற கேள்வி வந்தது.
அதற்குப் பதில் அளித்த துரை செந்தில்குமார், "இந்த நடிகருடன் படம் செய்தால்தான், படம் ஹிட் என்பது இல்லை. கன்டென்ட் சரியாக இருக்கும்பட்சத்தில் யார் நடித்தாலும் படம் ஓடும். நான் ’எதிர்நீச்சல்’ எடுத்தபோது சிவகார்த்திகேயன் ஸ்டார் இல்லை. அவருக்கு `மனம் கொத்தி பறவை' மட்டும்தான் வெளியாகி இருந்தது. அப்போது நான் ஒரு கதை செய்திருந்தேன். அது தனுஷ் சாருக்காகச் செய்தது `எதிர்நீச்சல்'. `காக்கி சட்டை'யும் அவருக்காக எழுதியதுதான். ஆனால் தனுஷ் சாருக்கு சிவா மேல் பெரிய நம்பிக்கை இருந்ததால் அவரை வைத்து படம் தயாரிக்க முடிவெடுத்தார். அதற்கு இயக்குநராக என்னை வெற்றி சார் பரிந்துரைத்தார். அப்படித்தான் ’எதிர்நீச்சல்’ சிவா நடிப்பில் உருவானது.
சிவாவின் பலமே அவர் பேசும் மாடுலேஷன்தான். ஆனால் இதில் கடைசி 20 நிமிடம் வசனமே கிடையாது. மாரத்தான் காட்சிகள் மட்டுமே இருக்கும். அதை என்னால் கொண்டுவர முடியம் என்ற நம்பிக்கை இருந்தது. அடுத்து செய்த `காக்கி சட்டை' படமும் கதைமேல் உள்ள நம்பிக்கை, சிவா மேல் இருந்த நம்பிக்கையிலும் உருவானதுதான். சிவாவுக்குக்கூட படத்தில் இவ்வளவு ஆக்ஷன் வேண்டுமா என்ற யோசனைகளை இருந்தது. ஆனால் புதிதாக இன்று செய்வோம் என்றுதான் இப்படிச் செய்தோம்.
நான் முதலில் தனுஷ் சாருக்கு ’காக்கி சட்டை’ கதையை எழுதியபோது மிகவும் சீரியஸான படமாக இருக்கும். ஆனால், சிவா உள்ளே வரும்போது அதற்குள் என்டர்டெய்ன்மெண்ட் மிஸ் ஆகக்கூடாது என பலரும் சொன்னார்கள். அதனால் சில விஷயங்கள் வைத்தோம். அப்படித்தான் லெஜெண்ட் சார்க்கு ஏற்றவாறு ஒரு படமாக லீடர் அமைந்துள்ளது" என்றார்.

