"ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெற்றோரிடமிருந்து.." ரவி மோகனின் எமோஷனல் பதிவு!
தமிழ் நடிகர் ரவி மோகன், தனது முதல் இயக்குநர் முயற்சியான ‘An Ordinary Man’ படத்தின் சில காட்சிகளையும் இசையையும் குடும்பத்தினருக்கு காட்டிய அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். குறிப்பாக தந்தை அளித்த உற்சாகமான ஆதரவால் நெகிழ்ந்த அவர், உலகின் ஒவ்வொரு குழந்தையும் பெற்றோரிடமிருந்து இப்படியான ஆதரவை பெற வேண்டும் என பிரார்த்தித்துள்ளார்; கடவுளுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். இவர் நடிப்பில் அடுத்ததாக `கராத்தே பாபு' படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. கூடவே அவர் 'An Ordinary Man' படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார். தற்போது இப்படம் குறித்து இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் "நேற்றிரவு என் குடும்பத்தினரைச் சந்தித்தேன்; என் இயக்கத்தில் உருவாகியுள்ள முதல் படமான 'An Ordinary Man'-இன் சில காட்சிகளையும் இசையையும் அவர்களுக்குக் காட்டினேன். இப்படம் விரைவில் உங்கள் அனைவரையும் வந்தடையவுள்ளது.
என் குடும்பத்தினர், குறிப்பாக என் அப்பா, எனக்கு அளித்த அந்த உற்சாகமான ஆதரவு... உலகில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெற்றோரிடமிருந்து அதைப் பெற வேண்டும் என்பதே என் பிரார்த்தனை. இறைவனின் அருளால் எல்லாம் சிறப்பாக அமைவதற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார் ரவி மோகன்.

