அவரை முதலமைச்சர் ஆக்குவது தான் கதை! - ராதா ரவி | Radha Ravi | Makkal Thalaiva
ராம் தேவ் இயக்கிய ‘மக்கள் தலைவா’ படத்தின் இசை வெளியீட்டில் ராதா ரவி பேசும்போது, ரவி மரியா கதையின் நாயகன் என்றாலும், ஒன்றும் தெரியாத ஒருவரை முதலமைச்சராக ஆக்கும் அரசியல் நையாண்டியே படத்தின் மையம் என கூறினார். தேர்தலுக்கு முன்போ பின்னாலோ வெளியானாலும் ஓடும் படமாக இது உருவாகியுள்ளதாகவும், சிக்கலான விஷயங்கள் நிறைந்திருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், பேரரசு, கஞ்சா கருப்பு எனப் பலரும் நடித்து ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'மக்கள் தலைவா'. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ராதா ரவி "இந்தப் படத்தில் ரவிமரியா கதையின் நாயகன் என சொன்னார்கள். கதையின் நாயகன் என்பதைவிட இந்தப் படத்திலேயே இளிச்சவாயன் அவர் தான்.
ஒன்றுமே தெரியாதவர் முதலமைச்சர் ஆகிறார். அவரை நான் எப்படி முதலமைச்சர் ஆக்குகிறேன் என்பது கதை. உண்மையில் இது தேர்தலுக்கு முன்பே ரிலீஸ் செய்திருக்க வேண்டிய படம். ஆனால் இந்தப் படத்தின் சிறப்பம்சம் என்ன என்றால், தேர்தலுக்கு முன்னால் வந்தாலும் இந்தப் படம் ஓடும், தேர்தலுக்கு பின்னால் வந்தாலும் ஓடும். ஏனென்றால் படத்தில் சில சிக்கலான விஷயங்களை வைத்திருக்கிறார். அதை யாராலும் தீர்த்து வைக்க முடியாது.
இந்த பட இயக்குநர் பார்க்க தான் நல்லவன் போல இருப்பான். ஆனால் நல்லவனே கிடையாது. படத்தில் நடிக்கவே எங்களை ஏமாற்றித்தான் அழைத்து சென்றான். முதலில் ஒரு சம்பளம் சொன்னான், பின்னர் அதிலிருந்து கொஞ்சம் குறைத்தான். நடித்துக் கொண்டே இருக்கும் போது இன்னும் குறைத்துவிட்டான். இதன்பிறகு விட்டுட்டு போக மாட்டோம் என அவனுக்கு தெரியும். ரொம்பவும் புத்திசாலி அவன். இந்தப் படமும் சிறப்பாக வந்திருக்கிறது, அனைவரும் தியேட்டரில் வந்து பாருங்கள்" என்றார்.

