நட்சத்திர அந்தஸ்த்திற்கு நான் Addict ஆனேன்! - சமந்தா | Samantha | Maa Inti Bangaram
பல்லாவரத்தில் இருந்து வந்து நட்சத்திர அந்தஸ்த்தும், ரசிகர் அபிமானமும் கிடைத்த அதிர்ச்சியில் பல படங்களில் நடித்ததாக சமந்தா ஒப்புக்கொள்கிறார். ஸ்டார் அந்தஸ்த்திற்கு அடிமையாகி, பத்திரிகை செய்திகளையும் ஹிட் பட்டியல்களையும் நம்பி வாழ்ந்ததாகவும், அப்போது பட வெற்றியையே முக்கியமாகக் கண்டதாகவும் கூறுகிறார். ஆனால் இன்று, ஒரு படத்தில் தன் உண்மையான பங்களிப்பே தன்னை மதிப்பிடும் அளவுகோல் என்கிறார்.
சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் `மா இன்ட்டி பங்காரம்'. இப்படம் ஜூன் 19ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்திற்கான பேட்டி அளித்துள்ளார் சமந்தா. அதில் நடிக்க வந்த புதிதில் சினிமா உலகத்தை பார்த்ததற்கு, இப்போது அந்த மனநிலை எப்படி மாறியுள்ளது என்பது குறித்தும் பேசி உள்ளார். அது குறித்து பேசும் போது, "நான் நடிக்க வந்த புதிதில் இதை ஒரு போட்டி களமாக பார்த்தேன். ஆனால் இங்கு எந்த போட்டியும் நடக்கவில்லை, அதெல்லாம் வெறும் மாயை தான் என இப்போது தான் புரிகிறது. இங்கு நாம் யாருடனும் போட்டியிடவோ, தோற்கடிக்கவோ வரவில்லை. இது ஒரு ரேஸ் கிடையாது, அதற்கு ஃபினிஷ் லைனும் கிடையாது.
ஒரு காலகட்டத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன், அவற்றில் பல படங்கள் குறித்து நான் பெருமைப்பட முடியாது. ஆனால் பல்லாவரம் என்ற இடத்திலிருந்து வந்த ஒரு பெண், மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தையும், மக்களின் அபிமானத்தையும் பெற்றேன் என்ற ஆச்சர்யத்தில் நான் வேலை செய்தேன். இந்த நட்சத்திர அந்தஸ்த்திற்கு நான் அடிக்ட் ஆகிவிட்டேன். என்னை பற்றி பத்திரிகைகளில், செய்திகளில் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து ஆர்வமாக இருந்தேன்.
நான் நடித்த பல படங்கள் ஹிட்டானதும் ராசியான நடிகை என்று கூட சொன்னார்கள். அவற்றை நான் நம்பினேன், அந்த உலகத்தில் வாழ ஆரம்பித்தேன். ஆனால் அப்போது ஒரு படத்திற்கு என்னுடைய பங்களிப்பு என்ன என்பது குறித்து நான் யோசிக்கவில்லை. என் படம் வெற்றியடைந்துவிட்டது, அது போதும் என நினைத்திருந்தேன். இப்போது அந்த எண்ணம் மாறிவிட்டது." என்றார்.

