Pan India Movieஐ துவங்கியதே சென்னைதான்! - கமல்ஹாசன் | Kamalhaasan | Vels | Ishari K. Ganesh
தயாரிப்பாளர் ஐசரி கணேசனின் வேல்ஸ் வர்த்தக மையம், வேல்ஸ் ஃபிலிம் சிட்டி மற்றும் வேல்ஸ் திரையரங்கம் ஆகியவற்றின் திறப்பு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசினார்.
இந்நிகழ்வில் அவர் பேசிய போது "கமல்ஹாசனுக்கும் ஐசரி கணேசனுக்கும் என்ன சம்பந்தம். நான் வேல்ஸ் நிறுவனத்தில் படம் செய்ததில்லை, ராஜ்கமலுடன் அவர் சேர்ந்து படம் செய்ததில்லை. ஆனால், என்னையும் அவரையும் சேர்க்கும் நட்பின் காரணம், எம் ஜி ஆர். அவர்தான் எங்களை சகோதரர்களாக மாற்றினார். நான் சினிமாவின் குழந்தை, எனக்கு அதை தவிர எதுவும் தெரியாது. அதை செய்து கொண்டிருக்கும் போது கற்றுக் கொண்டதுதான் மற்றவை அனைத்தும். அப்படி இருக்கும் சினிமா ஏதோ தேய்ந்து கொண்டிருப்பது போன்ற பயம் 25 வருடங்களுக்கு முன்பு எனக்கு வந்தது. ஏனென்றால் 17 தளங்கள் கொண்ட ஆசியாவிலேயே பெரிய ஸ்டுடியோ என்று இருந்த இடத்தை எதிர் ஸ்டுடியோவில் இருந்து பார்த்து பொறாமைப்பட்டு இருக்கிறேன். சரவணன் சாரிடம் போய் `நம்ம இன்னும் ஒரு 20 தளம் வைத்தால் ஆசியாவிலேயே பெரிய ஸ்டுடியோ நம்முடையதாக மாறிவிடுமே' என சொல்லி இருக்கிறேன். `சரி நீ பார்த்துக் கொள்வாயா அந்த 10 தளத்தை' என அவர் கேட்க பயத்தில் முடியாது என சொன்னேன். ஆனால் இப்போது அந்த பொறுப்பு சுஷ்மிதாவுக்கு வந்திருக்கிறது.
20 தளங்கள் கொண்ட ஆசியாவின் மிகப்பெரிய ஸ்டுடியோ வந்துவிட்டது. அது இங்கே இருப்பது நியாயம்தான். காரணம் Pan India Movie என்பதை துவங்கியதே சென்னை தான். இதுதான் ஹப். Pan India Film Making என்றால் அது சென்னைதான். மும்பையிலும் பெரிய இண்டஸ்ட்ரி இயங்கி வருகிறது என்றாலும், அவர்கள் அந்த மொழியில் மட்டுமே படம் எடுப்பார்கள். ஆனால் இங்கே AVM மோ மற்ற ஸ்டுடியோக்களோ, தயாரிப்பாளர்களோ, இயக்குநர்களோ பழமொழிகளில் படம் எடுத்து அங்கு சென்று கொடி நாட்டி வந்தவர்கள். அதிக சினிமா தயாரிக்கும் இந்த நாட்டில் இப்படி ஒரு ஸ்டுடியோ இருப்பது அவசியம் என்பதை ஒரு அரசு முடிவு செய்யாமல், தனி மனிதன் முடிவு செய்திருப்பது பாராட்டுக்குரியது.
இதை நாங்கள் அல்லவா செய்திருக்க வேண்டும் என இங்கிருக்கும் ஒவ்வொரு சினிமாக்காரர்கள் மனதிலும் இருக்கும். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. சரி செய்யவில்லை என்றால் என்ன, இங்கு வந்து வேலை செய்துவிட்டு போகிறேன். இங்கே இன்னும் நிறைய வரவேண்டும். நாம் சினிமாவை கற்றோம். ஆனால் எங்கு கற்றோம் என சொல்ல முடியவில்லை. நான் AVM போன்ற சில இடங்களில் கற்றேன். ஒருவேளை அது கிடைக்காமல் போயிருந்தால் என்ன செய்வது என நடுக்கமாக இருக்கிறது. அந்த நடுக்கம் வரும் தலைமுறைக்கு இல்லாமல் இருக்க, சினிமா பயிலும் அரங்கத்தையும் இங்கே ஏற்படுத்த வேண்டும். நாம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய மறந்து விட்டதாக நினைக்கிறேன். நான் சொல்வது அரசாங்கத்தை அல்ல, இந்த துறை அதனை செய்ய வேண்டும். இதெல்லாம் எனக்கு முன்பே தெரியாதா என்றால், தெரியும். ஆனால் இதை எல்லாம் செய்யக்கூடிய வசதி படைத்தவர்களை இப்போதுதான் தெரிய ஆரம்பித்திருக்கிறது" என்றார்.

