"சிவா படத்துக்கு இசையமைக்காத காரணம்.." - சந்தோஷ் நாராயணன் விளக்கம் | SK | Santhosh Narayanan
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். இவர் ரஜினி, விஜய், சூர்யா, தனுஷ் எனப் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருந்தாலும் இதுவரை சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைத்ததில்லை. இப்போது கமல் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் `சேயோன்' படத்துக்கு இசையமைக்கிறார்.
சமீபத்தில் கல்லூரி நிகழ்வு ஒன்றில் கலந்தகொண்ட சந்தோஷ் நாராயணனிடம், ’இவ்வளவு ஆண்டுகளாக சிவாவுடன் பணியாற்றாத காரணம் என்ன’ எனக் கேட்கப்பட, "நானும் சிவகார்த்திகேயனும் முதன்முறையாக இணைந்து ’சேயோன்’ படம் செய்கிறோம். இவ்வளவு காலம் ஏன் இணையவில்லை என ரொம்பவும் வருத்தப்பட்டோம். நாங்கள் மிக நெருக்கமான நண்பர்கள். மிக சுலபமாக அவருடன் எந்த படத்திலும் பணியாற்றி இருக்க முடியும். 2000 - 2008 வரை மிகவும் சிரமப்பட்டோம். சிவா கடந்து வந்த சிக்கல்கள் எல்லாம் எனக்கு நேரடியாகவே தெரியும்.
தொலைக்காட்சியில் இருந்து சினிமாவுக்கு வரவே முடியாது என உலகமே ஆணித்தரமாக நம்பிய காலகட்டம் அது. குறிப்பாக, தமிழில். அதை உடைத்து வந்தார். எங்களுக்கு யாரையும் தெரியாது என்பதால், வாய்ப்புக்காக நிறைய உழைக்க வேண்டி இருக்கும். சிவாவுடைய `ரெமோ', `மாவீரன்' போன்ற படங்களில் பணியாற்ற முயற்சித்தோம். ஆனால் சில காரணங்களால் அது நடக்கவில்லை. இப்போது சேயோனில் இணைந்திருக்கிறோம். பயங்கர ட்ரீட்டாக இருக்கும்" என்றார்.

