"என் உணர்வுகள் உண்மையானவை, என்னால் நடிக்க முடியாது" - ‘தேவர் மகன்’ சர்ச்சை குறித்து மாரி செல்வராஜ்!

மாமன்னன் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் கமல்ஹாசன் முன்பாக தேவர் மகன் குறித்து பேசியது இணையத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
Mari Selvaraj-Kamal Haasan-Thevar Magan Poster
Mari Selvaraj-Kamal Haasan-Thevar Magan PosterFile Image

வெளியான 30 ஆண்டுகளை கடந்தும் இன்றும் விவாதப் பொருளாக உள்ள ‘தேவர் மகன்’ படத்தை கமல்ஹாசன் எடுத்ததற்கான முழு காரணம், இறுதிக்காட்சியில் வெளிப்பட்டு இருக்கும்... படித்த இளைஞராக ஊருக்குள் அடியெடுத்து வைக்கும் கமல்ஹாசன் ஒரே சமூகத்தை சேர்ந்த இருவருக்குள் நடக்கும் பங்காளிச் சண்டையால் வெடித்த கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர அரிவாள் பிடித்திருப்பார்... நாசரை கொலை செய்த பிறகு ‘புள்ள குட்டிகள படிக்க வைங்கடா’ என்று அவர் பேசிய வசனம் படத்தைப் பார்த்த பலரது மனதில் இன்று வரை நிற்கிறது.

Thevar Magan
Thevar Magan

‘மாமன்னன்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், கமல் முன்னிலையிலேயே தேவர் மகன் படத்தை விமர்சனம்செய்தார். ‘மாமன்னன்’ உருவாவதற்கு ‘தேவர் மகன்’தான் காரணம் என்றும் படத்தை பார்த்தபோது தனக்கு ஏற்பட்ட வலி, அதிர்வுகளை கடக்க முடியாமல் தவித்ததாகவும் கூறினார். ‘தேவர் மகன்’ தனக்கு மனப்பிறழ்வுகளை ஏற்படுத்திய படம் எனவும் படம் சரியா தவறா என்று சொல்லத் தெரியாமல் பெரிய வலியை கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

தேவர் மகனில் நடித்த இசக்கி கதாபாத்திரம்தான் மாமன்னன் என மாரி செல்வராஜ் குறிப்பிட்டார். மாரி செல்வராஜ் பேசியது இணையத்தில் வேகமாக பரவ, அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் எழுந்துள்ளன. தேவர் மகனில் இசக்கி கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலு கோயில் பூட்டை உடைக்கும்போது, தானும் அதே சமூகத்தை சேர்ந்தவன் எனவும் தென்மதுரை பாண்டியனடா எனவும் பாடியிருப்பார். மாரி செல்வராஜ் குறிப்பிடுவது போல் இசக்கி கதாபாத்திரம் வேறு சமூகத்தை சேர்ந்தவர் இல்லை என்றும் அவரது புரிதல் தவறாக உள்ளது என்றும் பலரும் குற்றச்சாட்டினர்.

அதே நேரத்தில் மாரி செல்வராஜ் பேசியதன் நோக்கம் , ஒரு சமூகத்தால் ஒட்டுமொத்த ஊரும் பாதிக்கப்பட்டது, ஆதிக்க சமூகம் என்ற பெயரில் ஊரையே கலவர பூமியாக மாற்றியது ஆகியவற்றை உணர்த்தவே, என ஆதரவு குரல்களும் எழுந்தன. ‘தேவர் மகன்’ குறித்து மாரி செல்வராஜ் பேசுவது முதல்முறை அல்ல... கமல்ஹாசனுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் படத்தில் இடம்பெற்ற ‘போற்றிப் பாடடி பெண்ணே’ பாடலால் ஆறாம் வகுப்பு மாணவர்கள் கூட அடித்துக் கொண்டனர், தென் மாவட்டங்களில் எங்களுக்கு எதிராக உற்சாகத்துடன் மீசைகள் முறுக்கப்பட்டன என தனது வலியை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியான பிறகு தனக்கும், நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையேயான உரையாடல் முழுமையடையும் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். ‘தேவர்மகன்’ திரைப்படம் தொடர்பாக அவர் பேசிய விவகாரம் விவாதத்துக்குள்ளான நிலையில் புதிய தலைமுறைக்கு சிறப்பு பேட்டியளித்திருக்கும் அவர், இவ்வாறு கூறியுள்ளார்.

பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, “நான் அப்படி பேசியிருக்க வேண்டாம் என பலர் என்னிடம் சொன்னார்கள். தேவர்மகன் படத்தை விமர்சித்து கடிதம் எழுதவில்லை என சொல்லவில்லை. என் உணர்வுகள் உண்மையானவை, அதனால் நான் நடிக்க முடியாது. ‘மாமன்னன் திரைப்படம் நம்முடைய அரசியல்’ என கமல் சொன்னார். ஏக்கத்தின் அடிப்படையில் வந்த வார்த்தைகளையே மேடையில் பேசினேன். மாமன்னன் ரிலீஸுக்குப்பின் இந்த உரையாடல் முழுமையடையும்” என்றுக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com