மாரி செல்வராஜின் `மஞ்சணத்தி'யில் நடிப்பதை உறுதி செய்த நடிகைகள்! | Manjanathi | Mari Selvaraj
மாரி செல்வராஜின் புதிய படம் ‘மஞ்சணத்தி’ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தின் அறிவிப்பு போஸ்டர், வீடியோ வெளியானதும், நடிகை பட்டியல் குறித்து பல ஊகங்கள் எழுந்தன. கயாடு லோஹர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், ப்ரியங்கா மோகன் புதிய துவக்கம் என போஸ்டரை பகிர்ந்ததால், இருவரும் இப்படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளதாக தெரிகிறது.
`பரியேறும் பெருமாள்' படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். அதனை தொடர்ந்து `கர்ணன்', `மாமன்னன்', `வாழை', `பைசன் காளமாடன்' போன்ற படங்களை கொடுத்து கவனம் ஈர்த்தார். தற்போது தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். `மஞ்சணத்தி' என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் முதன்முறையாக இசையமைப்பாளர் இளையராஜா உடன் இணைந்து பணியாற்றுகிறார் மாரி. இப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் மற்றும் வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளனர். மாரி செல்வராஜின் ஆறாவது படமான இதில் நடிக்கப் போகும் கலைஞர்கள் பற்றிய விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் நடிகை கயாடு லோஹர் மற்றும் ப்ரியங்கா மோகன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை கயாடு லோஹர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஸ்டோரி வைத்துள்ளார். ப்ரியங்கா மோகனும் தனது இன்ஸ்ட்டா ஸ்டோரியில் புதிய துவக்கம் என 'மஞ்சணத்தி' போஸ்டரை பகிர்ந்திருந்தார். இதன் மூலம் இப்படத்தில் கயாடு லோஹர், ப்ரியங்கா மோகன் நடிப்பது உறுதியாகியுள்ளது.

